கோலி இல்லாத இந்தியா
"விராட் கோலி, விராட் கோலி தான். அவருக்கு யாராலும் சவால் விடமுடியாது. ஆனால், அவர் இல்லாமல் கூட இந்திய அணி ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடியிருக்கிறது" என தான் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் வக்கார் யூனிஸ்.
ரோஹித் சிறந்த கேப்டன்
"கோலி இல்லாத தொடரில், ரோஹித் சிறப்பாக செயல்பட்டார். மிக அமைதியாக இருந்தார். அவரது தலைமை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டதையும் பார்த்து இருக்கிறேன். அவர், மற்ற வீரர்களை தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறார். அவர் ஒரு சிறந்த கேப்டன்" என புகழ்ந்து தள்ளி உள்ளார் வக்கார் யூனிஸ்.
ஏழ்மை பின்னணியில் இருந்து…
மேலும், "இந்தியாவிடம் உலக தரத்திலான துவக்க வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் எப்போதும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதிலும், வேகப்பந்துவீச்சாளர்கள். அவர்கள் ஏழை குடும்பங்களில் இருந்து வருகிறார்கள். அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஐபிஎல் அங்கே பெரிய வித்தியாசத்தை கொடுத்துள்ளது" என ஒரே இந்திய புகழ்ச்சியாக பேசியுள்ளார் வக்கார் யூனிஸ்.
உள்குத்து இருக்குமோ?
"வக்கார் யூனிஸ் அவ்வளவு எளிதில் இந்தியா பற்றி இப்படி புகழ்ந்து பேச மாட்டாரே" என்ற சந்தேகம் தான் நமக்கு எழுகிறது. "இவர் புகழ்ச்சியில் எதுவும் உள்குத்து இருக்குமோ" என ஒரு பக்கம் நினைத்தாலும், "அப்படி எல்லாம் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் இந்த பாகிஸ்தான்காரருக்கு இந்தியாவை புகழ்ந்து பேச ஒரு மனசு வேணுமே" என பாராட்டவும் தோன்றுகிறது.