லண்டன் : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு மாதங்கள் விளையாடிவிட்டு இந்திய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு திரும்புவதால் சோர்வாக இருப்பார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ரிக்கி பாண்டிங்கின் இந்த கருத்து ஏற்கும் வகையில் இருந்தாலும், இது தவறானது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வசீம் அக்ரமும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூறி இருக்கிறார்கள்.

இது குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம், ஒரு தொடருக்கு முன்பு தயாராகுவது என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சில பேர் அதற்காக ஒன்றுமே செய்யவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக சிலர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியுமே விளையாடவில்லை.
ஆனால் இந்திய வீரர்கள் கடந்த இரண்டு மாதமாக சவால்கள் நிறைந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடிருக்கிறார்கள். எனவே கிரிக்கெட்டு விளையாடாமல் ஓய்வெடுத்துக் கொண்டு வந்தவருக்கும் ஐபிஎல் போன்ற தொடரில் விளையாடி சோர்வாக வந்தாலும் கிரிக்கெட் விளையாடி வந்தவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.வரும் வாரத்தில் நிறைய விஷயங்கள் இரு அணியின் வெற்றியையும் தீர்மாணிக்கும்.
ஒரு கிரிக்கெட் வீரராக ஒரு பெரிய தொடரில் களமிறங்குவதற்கு முன்பு நான் சில கிரிக்கெட் போட்டியிலாவது விளையாடி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது எந்த வகை கிரிக்கெட் ஆக இருந்தாலும் பரவாயில்லை. நான் கொஞ்சமாவது விளையாடி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கிரிக்கெட் தொடர் அல்லது ஐபிஎல் போன்ற தொடர் எனக்கு கண்டிப்பாக ஒரு பயிற்சியாக இருக்கும் என வசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி , வசிம் அக்ரம் சொல்வது உண்மைதான். ஆனால் வீரர்களின் உடல் தகுதியும் முக்கிய பங்கு வகிக்கும். இதுபோன்ற தொடரில் விளையாடும்போது நீங்கள் கொஞ்சமாவது கிரிக்கெட் விளையாடி இருக்க வேண்டும். நீங்கள் எத்தனை ஓவர் விளையாடினீர்கள் ? எவ்வளவு காலம் இருந்தீர்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல. குறைந்தபட்சம் ஆடுகளத்தில் ஆறு மணி நேரம் ஆவது நீங்கள் விளையாடி இருக்க வேண்டும்.
பயிற்சி முகாமில் ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு மணி நேரம் பந்து வீசுவதற்கும், ஐபிஎல் போன்ற தொடரில் விளையாடி வருபவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஆஸ்திரேலியா அணிக்கு நிச்சயம் சாதகமான சூழல்தான் விளங்குகிறது. சமி ஆட்டத்தின் முதல் மணி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை சிதற அடித்தால் நிச்சயம் இந்தியாவுக்கும் வாய்ப்பு இருக்கும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.