இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகப் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம், ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பர குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது பாகிஸ்தான் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அனைத்து விதமான சூதாட்டமும் தடை செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் அவை சட்டவிரோதம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி இருந்தும் வாசிம் அக்ரம் எவ்வாறு இதை செய்தார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

முகமது ஃபியாஸ் என்பவர், பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு ஏஜென்சியிடம் (NCCIA) வாசிம் அக்ரம் மீது இந்த புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், "பாஜி" (Baji) என்ற வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்ட செயலியை வாசிம் அக்ரம் விளம்பரப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக, வாசிம் அக்ரம் இடம்பெற்றுள்ள விளம்பர போஸ்டர் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் மின்னணு குற்றங்கள் சட்டம் 2016-இன் கீழ், இது ஒரு சட்டவிரோதச் செயல் என்பதால், வாசிம் அக்ரம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்தாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகார் குறித்து NCCIA அதிகாரி ஒருவர் கூறுகையில், "வாசிம் அக்ரம் ஒரு வெளிநாட்டு சூதாட்ட செயலியின் விளம்பர தூதராக இருப்பதாக புகார் வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் 'ஸ்விங் சுல்தான்' என்று வர்ணிக்கப்படும் வாசிம் அக்ரம், இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த விவகாரம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தேசிய விளையாட்டு நட்சத்திரம் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடலாமா என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில், இதே ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதாக பிரபல யூடியூபர் சாத்-உர்-ரெஹ்மான் (டக்கி பாய் என அறியப்படுபவர்) கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாகிஸ்தானின் மிக உயரிய விளையாட்டு வீரர்களில் ஒருவரான வாசிம் அக்ரம் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரத்தின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.