மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேருமே சிறப்பாக பந்து வீசி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள். இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சுப்படை இங்கிலாந்து போன்ற அணிகளையும் சுளுக்கு எடுத்தது.

இந்த நிலையில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு தடுமாறி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஹசன் ராசா என்ற வீரர் இந்தியா குறித்து கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். அதில் இந்திய வீரர்கள் பந்து வீச தொடங்கும் போது முகமது சிராஜ் மற்றும் சமீ ஆகியோருக்கு எந்த வகை பந்து வழங்கப்படுகிறது என்பதை போட்டி நடுவர்கள் கண்காணிக்க வேண்டும்.
ஏனென்றால் இந்தியா பேட்டிங் செய்யும்போது ஆடுகளும் சாதாரணமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் பந்து வீசும் போது ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. மேலும் டி ஆர் எஸ் போன்ற தொழில்நுட்பமும் இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுகிறது. இதனால் பந்தில் ஏதோ இந்தியா மாற்றம் செய்திருக்கிறது என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஹசன் ராசாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம் ஹசன் ராசாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக இது குறித்து நான் நிறைய படிக்கின்றேன். ஆனால் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் பேசுவதெல்லாம் கேட்பதற்கு வேண்டுமானால் சிரிப்பாக இருக்கலாம்.
ஆனால் உங்கள் அறிவில் ஒன்றுமே இல்லை என்பது தான் இது காட்டுகிறது. இது போன்ற கருத்துக்களை சொல்வதன் மூலம் உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறீர்கள். ஒட்டுமொத்த உலகத்திற்கு முன்பு உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்கிறீர்கள். இது போன்ற கருத்துக்களை கூறாதீர்கள். முதலில் நடுவர்கள் மைதானத்தில் பார்வையாளர்கள் என பல பேர் இருக்கும் போது இவ்வாறு இப்படி செய்ய முடியும்.
மேலும் பந்தை நன்றாக ஸ்விங் செய்ய வைக்கும்படி எந்த ஒரு தொழில்நுட்பமும் இதுவரை வரவில்லை. இந்திய பவுலர்கள் தற்போது உலகத்திலே சிறந்து விளங்குகிறார்கள். அவர்களிடம் திறமை இருக்கிறது. இதனால் தான் அவர்கள் மற்ற பவுலர்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.