லண்டன்: பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை விளம்பரப்படுத்துவதற்காக லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், சம்பந்தமே இல்லாமல் ஐபிஎல் தொடரை மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார். "ஐபிஎல் தொடர் முடிவதற்குள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிடுவார்கள்" என்று அவர் கிண்டலாகக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
2026-ம் ஆண்டுக்கான பிஎஸ்எல் தொடரை முன்னிட்டு, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சார்பில் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, பாபர் அசாம், ஹாரிஸ் ரவூப் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசும்போது, பிஎஸ்எல் தொடரின் சிறப்பம்சங்களைப் புகழந்த வாசிம் அக்ரம், திடீரென ஐபிஎல் தொடரின் கால அளவை விமர்சித்தார். அவர் பேசுகையில், "குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிடுவார்கள்.. ஆனால் அந்த லீக் (ஐபிஎல்) மட்டும் முடியாது" என்று நக்கலாகக் குறிப்பிட்டார்.
ஐபிஎல் தொடர் சுமார் இரண்டரை முதல் மூன்று மாதங்கள் வரை நடப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பிஎஸ்எல் தொடரின் குறுகிய கால அளவே சிறந்தது என்று வாதாடினார். தொடர்ந்து பேசிய அவர், "பிஎஸ்எல் தொடரின் மிகச்சிறந்த விஷயமே, அது வெறும் 34 முதல் 35 நாட்களில் முடிந்துவிடும். அடுத்த ஆண்டு இன்னும் சில நாட்கள் கூடலாம். வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு வரும்போது, 35-40 நாட்கள் இருக்கவே விரும்புகிறார்கள்.
அதைவிட்டுவிட்டு, 3 மாதங்கள் ஒரே தொடரில் இருப்பது அனைவருக்கும் கடினம். எனக்கே அது போர் அடித்துவிடுகிறது" என்று கூறினார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் (BBL) கூட தனது கால அளவைக் குறைத்துக்கொண்டதை அவர் உதாரணமாகக் காட்டினார்.
கால அளவு மட்டுமல்லாமல், பந்துவீச்சு தரத்திலும் ஐபிஎல்-ஐ விட பிஎஸ்எல் சிறந்தது என்று அக்ரம் கூறினார். "நான் பேசும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பிஎஸ்எல் பந்துவீச்சு தரத்தைப் புகழ்கிறார்கள். ஐபிஎல் மற்றும் பிற லீக்குகளை விட, பந்துவீச்சு தரத்தில் பிஎஸ்எல் தான் நம்பர் 1 என்று அவர்கள் கூறுகிறார்கள். எங்களிடம் தரம் உள்ளது, மற்றவர்களிடம் எண்ணிக்கை தான் உள்ளது" என்று ஐபிஎல் பந்துவீச்சை மட்டம் தட்டினார்.
இவ்வளவு விமர்சித்தாலும், உலக அளவில் ஐபிஎல் தான் முதன்மையான லீக் என்பதையும், அதற்கு அடுத்த இடத்தில்தான் பிஎஸ்எல் உள்ளது என்பதையும் அவர் இறுதியில் ஒப்புக்கொண்டார். பாபர் அசாம் மற்றும் பிசிபி தலைவர் முன்னிலையில் வாசிம் அக்ரம் ஐபிஎல் பற்றி இப்படிப் பேசியது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.