மெல்பேர்ன்: இந்திய அணியில் இளம் வீரர்களை பிசிசிஐ கெடுத்து வைத்திருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதி வரை சென்று மோசமாக வெளியேறியது.
இந்தியாவின் தோல்விக்கூட சகஜம் தான் என்றாலும், 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது தான் ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்த போதும், பவுலிங் சொல்லிக்கொள்ளும் படி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக அஸ்வின், அக்ஷர் பட்டேல் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற புகார்கள் உள்ளன.

இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் பெரும் குறையை வசீம் அக்ரம் கூறியிருக்கிறார். ஆசிய கோப்பையில் நான் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தேன். இந்திய வீரர்கள் தங்களது வேகத்தை குறைக்கின்றனர். ஆவேஷ் கான் ஐபிஎல் தொடரின் போது 145கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசினார். ஆனால் ஒரே ஆண்டில் அது 130 - 135 கிமீ வேகத்திற்கு அது குறைந்தது. இதுகுறித்து பிசிசிஐ விசாரணை நடத்தியே தீர வேண்டும்.
என்னை பொறுத்தவரையில் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களின் சம்பளத்திற்கு ஒரு வரம்பு வைக்க வேண்டும். அப்போது தான் நன்றாக ஆடினால் தான் பணம் என்பதை புரிந்துக்கொள்வார்கள். எனக்கு ரூ.24 கோடி சம்பளம் கொடுத்தால், நான் ஏன் சிரமப்பட வேண்டும், எனது செயல்பாடுகள் குறையதானே செய்யும். இதற்கு பிசிசிஐ தான் முடிவெடுக்க வேண்டும் என வசீம் அக்ரம் பேசியுள்ளார்.