இந்திய அணியில் ஆட்டம்
ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து அதன்மூலம் இந்திய அணியிலும் இடம்பெற்றவர் வாசிம் ஜாபர். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் இவர். மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வருபவர்.
அதிக போட்டிகளில் விளையாட்டு
ரஞ்சிக் கோப்பையின் இந்த இன்னிங்சில் தனது 150வது போட்டியை ஜாபர் கடந்துள்ளார். கடந்த 2019 ஜனவரியில் தனது 146வது போட்டியில் விளையாடியதன்மூலம் மத்திய பிரதேசத்தின் தேவேந்திர பண்டேலோவின் 145 போட்டிகள் என்ற சாதனையை இவர் முறியடித்தார். தற்போது 150 போட்டியை கடந்து ரஞ்சியில் அதிக போட்டிகளை விளையாடிய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இவர் தட்டி சென்றுள்ளார்.
முதல் வீரர் வாசிம் ஜாபர்
இதேபோல ரஞ்சி கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அதாவது 12,000 ரன்களை முதன்முதலில் அடித்த வீரர் என்ற பெருமையையும் வாசிம் ஜாபர் தற்போது பெற்றுள்ளார். இந்த சாதனை மூலம் கடந்த 2018ல் 11,000 ரன்களை அடித்து சாதனை புரிந்த அமோல் மசூம்தாரின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
விதர்பா -கேரள அணிகள் மோதல்
தற்போதைய ரஞ்சி கோப்பை சீசனில் விதர்பா அணிக்காக களமிறங்கி விளையாடிவரும் வாசிம் ஜாபர், கேரள அணிக்கு எதிரான போட்டியின்போது 12,000 ரன்கள் என்ற இந்த சாதனையை வாசிம் ஜாபர் புரிந்துள்ளார். கேரளாவிற்கு எதிரான போட்டியில் முதல் 4 ரன்களில் விதர்பா அணி முதல் விக்கெட்டை இழந்த நிலையில் ஜாபர், அந்த அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினார்.