
திணறிய இங்கிலாந்து
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டானார்கள். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் 36 பந்துகளில் 57 ரன்கள் விளாச, இந்தியா 191 ரன்களை சேர்த்தது. இதன் இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பும்ராவின் ஓரே ஓவரில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் வெளியேறினார்கள். இந்த தொடரில் மூன்று சதங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி 21 ரன்களில் வெளியேறினார். அதுவும், முதல் நாள் ஆட்டம் முடியவிருந்த நேரத்தில், அவர் அவுட்டானது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்த அணி 62 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் பிறகு, ஆறாவது விக்கெட்டுக்கு ஜானி பேர்ஸ்டோ - ஓலே போப் ஜோடி சிறப்பாக விளையாடியது. 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்களை சேர்த்தது. பிறகு மெல்ல மெல்ல சதத்தை நோக்கி முன்னேறிய ஓலே போப், 81 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாகூர் ஓவரில் போல்டானார். மொயீன் அலி தன் பங்குக்கு 35 ரன்கள் எடுக்க, இறுதிக் கட்டத்தில் க்றிஸ் வோக்ஸ் 60 பந்துகளில் 50 ரன்கள் விளாசி, கடைசி விக்கெட்டாக ரன் அவுட்டாக, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் சேர்த்தது. இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

சாதித்து காட்டிய ரோஹித்
இந்த இக்கட்டான நிலையில் தான், இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டிருந்தாலும், இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பாகவே விளையாடினார்கள். எனினும், லோகேஷ் ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்சைட் எட்ஜ் ஆகி 46 ரன்களில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய புஜாரா, ரோஹித் ஷர்மாவுக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க, மிக கவனமாக பந்துகளை எதிர்கொண்டார் ரோஹித் ஷர்மா. மொயீன் அலி ஓவரில் இறங்கி வந்து மெகா சிக்ஸர் விளாசிய ரோஹித், இந்திய மண்ணுக்கு வெளியே, அதாவது வெளிநாட்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 205 பந்தில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தின் எட்டாவது சதமாகும். ஒரு தொடக்க வீரராக நான்காவது டெஸ்ட் சதமாகும். இந்த இன்னிங்ஸின் மூலம், அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 11,000 ரன்களை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை நிறைவு செய்தார். மேலும் இங்கிலாந்தில் ஒரு தொடக்க வீரராக சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் அவர் பெற்றார்.

கடைசி வாய்ப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 'ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான வீரர் ரோஹித்; அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார்' என்று என்று ரோஹித்தை கணித்து விமர்சித்தவர்கள் ஏராளம். அதில், உண்மையும் இருந்தது. காரணம், அவரால் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் தன்னை நிரூபிக்க முடியவில்லை. எனினும், கடந்த ஒரு வருட காலமாக, ஓரளவுக்கு நிலையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு தன்னை பக்குவப்படுத்தினார். இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில், ரோஹித் சிரமப்படவில்லை. பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை என்றாலும், அவர் ஆஸ்திரேலிய ஸ்பீட்ஸ்டர்களை நேர்த்தியாக எதிர்கொண்ட விதம், தொடர்ந்து அவருக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான வாய்ப்பை கொடுத்தது. எனினும், இந்த இங்கிலாந்து தொடர், அவருக்கான கடைசி வாய்ப்பாகவே இருக்கும் என்று பலரும் முணுமுணுத்ததை கேட்க முடிந்தது. ரோஹித்தே, 'இந்த தொடர் தான் எனது கடைசி வாய்ப்பு என்று இந்திய அணி நிர்வாகத்தில் பேசியதை நான் அறிவேன்" என்று கூறியிருந்தார்.
வாசிம் ஜாஃபர் ட்வீட்
ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி இன்று இங்கிலாந்து மண்ணில், அதுவும் மிக முக்கியமான இரண்டாவது இன்னிங்ஸில் சதம் (127 ரன்கள்) அடிக்கும் அளவுக்கு தன் திறமையை வளர்த்திருக்கிறார். இந்நிலையில், இந்திய முன்னாள் டெஸ்ட் வீரர் வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டரில், ரோஹித் சதம் குறித்த ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான "அருணாச்சலம்" படத்தின் ஸ்டில் ஒன்றை பதிவிட்டு, "ரோஹித் இதுவரை வெளிநாட்டில் டெஸ்ட் சதம் அடித்ததில்லை" என்ற புகாருக்கு ரோஹித் "Challenge accepted" என்று கூறுவது போல் குறிப்பிட்டுள்ளார். அதாவது அருணாச்சலம் படத்தில் கதைப்படி ரஜினிகாந்த், "30 நாட்களில் 30 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்தால், 3000 கோடி ரூபாய் சொத்து அவருக்கு வந்து சேரும்" என்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்போது ரஜினி, "சவாலே ஒத்துக்குறேன்" என்று தனது ஸ்டைலில் சொல்லி, 30 நாட்களில் 30கோடி செலவழித்து முடித்திருப்பார். அதேபோல், ரோஹித் ஷர்மா தன் மீதான "வெளிநாட்டில் டெஸ்ட் சதம் அடித்ததில்லை" என்ற சவாலை ஏற்றுக் கொண்டு, நேற்று அதை செய்து முடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











