
ஓய்வு அறிவிப்பு
சர்வதேச போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியவர் வாசிம் ஜாபர். மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக கடந்த 20 ஆண்டுகளாக விளையாடிவந்த ஜாபர், தற்போது சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் 260 போட்டிகளில் விளையாடி 20 ஆயிரம் ரன்களை குவித்தவர் இவர்.

சச்சின் டெண்டுல்கர் புகழாரம்
இந்நிலையில், வாசிம் ஜாபர் எப்போதுமே எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்று முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார். இத்தனை ஆண்டுகள் விளையாடி தனது நிலையான ஆட்டத்தை தொடர்ந்து பதிவு செய்தவர் ஜாபர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆயினும் மற்றவர்களைபோல அல்லாமல் மிகவும் பொறுமையாக சூழ்நிலைகளை கையாள்பவர் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.

பாராட்டு தெரிவித்த சச்சின்
கிரிக்கெட்டின் மிகவும் பிரமாதமான பிரதிநிதியாக விளங்கியவர் ஜாபர் என்று கூறியுள்ள சச்சின், மும்பை அணிக்கான அவருடைய பங்களிப்பு வியக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். அவருடன் பயிற்சி மேற்கொண்ட காலகட்டங்களில் அவருடன் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் சச்சின் கூறியுள்ளார்.

அதுவே அவரது தனித்திறமை
துவக்க வீரராக களமிறங்கினாலும் எதிரணியின் வேகப்பந்து வீச்சுகளை சமாளித்து மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடும் தனித்திறமை மிக்கவர் ஜாபர் என்று கூறிய சச்சின் டெண்டுல்கர், அவரை ஆரம்பத்திலேயே அவுட் ஆக்கவில்லை என்றால், எதிரணியினர் நீண்ட நேரம் பீல்டிங் செய்ய வேண்டியது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கருத்து
எதிரணிக்கு எப்போதுமே ஜாபர் அச்சுறுத்தலாக விளங்கியதாகவும், எதிரணியின் பந்துகளை தடுத்து விளையாடுவதில் அவர் வல்லமை மிக்கவர் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அவர் அடித்த சதம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த இரட்டை சதம் அவரது பெருமைக்கு சான்று என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











