பிர்மிங்காம்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2025 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரில், தொடர்ச்சியான தோல்விகளால் வெளியேறும் தருவாயில் இருந்த இந்தியா சாம்பியன்ஸ் அணி, வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
செவ்வாயன்று நடைபெற்ற இந்த முக்கியமான லீக் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டும் போதாது; நெட் ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணியை முந்த, 145 ரன்கள் என்ற இலக்கை 14.1 ஓவர்களுக்குள் எட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்கத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கீரான் பொல்லார்ட் 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை 144/9 ஆக உயர்த்தினார். இந்திய அணி தரப்பில் பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஸ்டூவர்ட் பின்னியும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ராபின் உத்தப்பா மற்றும் ஷிகர் தவான் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 8 ஓவர் முடிவில் 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அப்போது, தகுதி பெற 42 பந்துகளில் 93 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த நெருக்கடியான நிலையில், ஜோடி சேர்ந்த ஸ்டூவர்ட் பின்னி மற்றும் கேப்டன் யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர். பின்னி வெறும் 21 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். யுவராஜ் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் யூசுப் பதான் தனது பங்குக்கு 7 பந்துகளில் 21 ரன்கள் விளாசி, 14-வது ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து, 13.2 ஓவர்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்த இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே லீக் சுற்றில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறவிருந்த போட்டி, சில இந்திய வீரர்கள் விலகியதால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜூலை 31 அன்று பர்மிங்காமில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆனால், இந்திய வீரர்கள் முன்பு போல இப்போதும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட மறுத்து விலகுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.