சென்னை: 2018ம் ஆண்டு சென்னை அணி வீரர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தோனி கண்கலங்கி பேசிய தருணம் அனைவருக்கும் நெகிழ்ச்சியான ஒன்று என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதுமட்டுமல்லாமல் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக பார்க்கப்படுவதால், முன்னாள் வீரர்கள் பலரும் தோனி குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை அணியின் முக்கிய அங்கமாக இருந்த இம்ரான் தாஹிர் தோனி குறித்தும், சென்னை அணி குறித்தும் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதுவரை சென்னை அணிக்காக இம்ரான் தாஹிர் 59 போட்டிகளில் விளையாடி 82 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதிலும் 2018ஆம் ஆண்டு இம்ரான் தாஹிரின் கொண்டாட்டத்தை பார்த்து சென்னை ரசிகர்கள் அவருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்து அழைத்தனர்.
இந்த நிலையில் இம்ரான் தாஹிர் பேசுகையில், 2018-ம் ஆண்டு சென்னை அணி வீரர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேப்டன் எம்எஸ் தோனி கண்கலங்கினார். அப்போதுதான் சென்னை அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பது புதிதாக இணைந்த வீரர்களுக்கும் தெரிந்தது. அந்த தருணம் அணியில் இருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியான ஒன்று என்று தெரிவித்துள்ளார். இரு ஆண்டுகள் தடைக்கு பின் வந்த சென்னை அணி, சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் கொடுத்தது.
இரு ஆண்டுகளுக்கு பின் சென்னை அணிக்கு திரும்பிய தோனி, புதிய வீரர்களுக்கு சிஎஸ்கேவின் பாரம்பரியத்தை அறிய வைப்பதற்காக டின்னர் ஒன்றை ஏற்பாடு செய்தார். அப்போது தோனி பேச முயற்சித்த போது, தழுதழுத்த குரலில் கண்கலங்கினார். அந்த காட்சிகள் "Roar of the Lion" என்ற குறுந்தொடர் மூலம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.