சென்னை: ஆஸ்திரேலியா அணியின் முதன்மை ஸ்பின்னர்களில் ஒருவராக மேக்ஸ்வெல் இருப்பார் என்று அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி ஆடம் ஸாம்பாவுடன் மட்டுமே களமிறங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இரண்டாவது ஸ்பின்னராக மேக்ஸ்வெல்லை நம்பியே ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், ஆஸ்திரேலிய அணியில் ஏராளமான பவுலிங் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் மேக்ஸ்வெல்லை இத்தனை ஆண்டுகளாக பார்த்துள்ளோம். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் மேக்ஸ்வெல் மட்டுமே முதன்மை ஸ்பின்னராக ஆடினார். இந்திய அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியிலும் மேக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசினார். அதனால் ஸாம்பா மற்றும் மேக்ஸ்வெல் இருவருமே 20 ஓவர்கள் வீசுவார்கள் என்று நம்புகிறோம்.
மேக்ஸ்வெல்லும் அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது அனுபவத்தை கொண்டு ஃபீல்டிங்கிற்கு ஏற்றவாறும் பவுலிங் செய்ய முடிகிறது. அதேபோல் ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை பேட்டிங் அல்லது பவுலிங்கில் நிச்சயம் ஒன்றில் சிறப்பாக செயல்படுவார்கள். அதனால் அணிக்கு நன்மை தான். எங்கள் அணியில் டாப் 7 வீரர்களில் அதிகமான ஆல்ரவுண்டர்கள் இருப்பது மகிழ்ச்சி தான். அவர்களிடம் எதிர்பார்ப்பது பேட்டிங் மட்டுமே என்றாலும், பந்துவீசவும் தயாராக இருக்கிறார்கள்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணிக்காக நிச்சயம் அதிகமான ஓவர்களை முக்கிய பவுலர்கள் தான் வீசுவார்கள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மிட்செல் மார்ஷை பொறுத்தவரை உயரத்திற்கு ஏற்றவாறு பெரிய பெரிய சிக்சர்களை விளாச கூடியவர். எவ்வளவு பெரிய மைதானத்திலும் எளிதாக சிக்சர்களை அடிக்க கூடியவர். ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடரில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்துவிட்டார். அதனை இந்தியாவிலும் செய்ய காத்திருக்கிறார்.
அதேபோல் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இன்னும் முழு ஃபிட்னஸை எட்டவில்லை. இதனால் நாளையா போட்டியில் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும். ஆனால் நிச்சயம் ஆடம் ஸாம்பா களமிறங்குவார். ஸ்விம்மிங் செய்த போது சிறிய காயம் ஏற்பட்டது. மற்றபடி அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடந்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளை விளையாடியதை விடவும் இந்தியாவில் தான் அதிக கிரிக்கெட்டை ஆடி இருக்கிறோம். ஐபிஎல் தொடர் மூலம் ஆடுகளங்கள் பற்றி நன்றாக அற்விவோம் என்று தெரிவித்துள்ளார்.