சச்சினுக்கு அழைப்பு
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை துவங்கவுள்ள 5 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்தியா மற்றும் வங்கதேசத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு போட்டி
கடந்த 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் அடிலெய்டில் முதல் பிங்க நிற பந்துகள் போட்டிகள் நடைபெற்ற நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்தியா இதில் பங்கேற்கிறது.
சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை
உலகமே உற்று நோக்கும் இந்த போட்டியில் ரசிகர்களை அதிகளவில் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளை பார்க்க மைதானத்திற்கு ரசிகர்களை கவர்வது முக்கியமான விஷயம்தான் என்று தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஆனால் அதற்காக கிரிக்கெட்டில் எந்த சமரசமும் செய்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
தரம் குறித்து மதிப்பிட வேண்டும்
முதல் முறையாக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை அடுத்து, கிரிக்கெட்டின் தரம் இந்த புது முயற்சியில் பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெற்றி பெற்றதாக அர்த்தம்
பார்வையாளர்களை மைதானத்திற்கு இழுப்பதற்காக புதிய முயற்சிகள் செய்யப்படுவது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ள சச்சின், ஆனால் கிரிக்கெட்டின் தரம் பாதுகாக்கப்பட வேண்டியதும் அவசியம் என்றும் கூறியுள்ளார். இந்த இரண்டு விஷயங்களும் சரிவர நடைபெற்றால் மட்டுமே நாம் இந்த புதிய முயற்சியில் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அது மட்டுமே வெற்றியாக கொள்ளப்படாது
கிரிக்கெட்டில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது அதிகமான பார்வையாளர்களை கவர்வது மட்டுமே அதன் வெற்றியாக பார்க்கப்படக் கூடாது என்றும் சச்சின் தெரிவித்துள்ளார். அது அதன் ஒரு பகுதி மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.