
சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை துவங்கி நடைபெறவுள்ளது. முதலில் ஆடப்பட்டுள்ள இரு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு வெற்றியை பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இதனிடையே, இரண்டாவது போட்டியின் அபார வெற்றியை சிட்னி போட்டியிலும் இந்தியா தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்தியா அபாரம்
கோலி இல்லாத ரஹானே தலைமையிலான கடந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முக்கிய வீரர்கள் விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட வீரர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டுள்ளது. இதை சாதித்து காட்டினார் கேப்டன் ரஹானே.

நாளை துவக்கம்
இந்நிலையில் தற்போது சிட்னியில் நாளை துவங்கவுள்ள 3வது போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா பங்கேற்று ஆடவுள்ளார். அடுத்த இரு போட்டிகளில் அவர் துணை கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார். ரோகித் அணியில் இணைந்துள்ளது அணிக்கு மேலும் வலிமையை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் அறிவிப்பு
இந்நிலையில் ரோகித் சர்மா அணியில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார். 3வது போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ரோகித் சர்மா டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். நெட் பயிற்சிகளில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications