மொஹாலி: சூர்யகுமார் யாதவ் மீது இந்திய அணி நிர்வாகம் முழு நம்பிக்கை வைத்து ஆதரவாக இருப்பதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. மொஹாலியில் தொடங்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெறுவதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

இதனால் முதல் இரு போட்டிகளில் ஆசியக் கோப்பை அணியில் அதிக வாய்ப்பை பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் டிராவிட் பேசுகையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ரெஸ்ட் கொடுப்பது இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு தான்.
இந்த முடிவை எடுப்பதற்கு முன் அதிக நேரம் ஆலோசனை செய்தோம். ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இருவரும் உடல் மற்றும் மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாகவே இருவருக்கும் முதல் இரு போட்டிகளில் ஓய்வு வழங்கி இருக்கிறோம். அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வினின் திறமையும், அவரால் என்ன செய்ய முடியும் என்பதும் எங்களுக்கு நன்றாக தெரியும்.
அதேபோல் நம்பர் 8 வீரராக ரவிச்சந்திரன் அஸ்வினால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஒருவேளை உலகக்கோப்பை தொடரின் போது யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், அவர் அணிக்குள் வருவார். ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் இந்திய அணி திட்டத்தில் இருந்திருக்கிறார். அதன் காரணமாகவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறோம். அவருக்கும் கேம் டைம் கொடுக்க வேண்டும்.
அதேபோல் சூர்யகுமார் யாதவ் மீது அணி நிர்வாகம் முழுமையான நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்து வருகிறது. அவரால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.