கொல்கத்தா: பஞ்சாப் அணியில் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசி பந்தில் ரிங்கு சிங் பவுண்டரியை விளாசி வெற்றிபெற வைத்தார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 அணிகள் 10 புள்ளிகளுடன் உள்ளன.
இந்த நிலையில் தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது வேதனையாக உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்துவிட்டோம். இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கவில்லை. 179 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த போது, எங்களால் டிஃபெண்ட் செய்ய முடியும் என்று நினைத்தோம். ஆனால் கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். கடந்த போட்டியில் கிடைத்த மோசமான அனுபவத்தில் இருந்து அர்ஷ்தீப் சிங் மீண்டு வந்துள்ளார்.
கடைசி பந்து வரை ஆட்டம் சென்றதற்கு அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு தான் காரணம். பஞ்சாப் அணியில் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்கள் இல்லை. அதன் காரணமாக இடதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் ஆடும் போது அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறோம். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறோம். இந்த பிட்ச்சில் பந்து நன்றாக திரும்பியது. அங்கு தான் எங்கள் பேட்டிங்கும் பிரச்சனையை சந்தித்தது என்று தெரிவித்தார்.