சும்மா விடற மாதிரி இல்ல... பந்தை ஷைன் செய்யறதுக்கு வேற திட்டம் வச்சிருக்கோம்... கெமர் ரோச்
லண்டன் : இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட தொடர் நாளை மறுதினம் முதல் துவங்கவுள்ளது. இதற்கென இரு அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
இந்நிலையில், வீடியோ கால் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் பௌலர் கெமர் ரோச், எச்சில் தடை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
பந்தை ஷைன் செய்வதற்கு எச்சில் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக வேறு திட்டத்தை முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

நாளை மறுதினம் துவக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், ஐசிசி விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையில், நாளை மறுதினம் சௌதாம்ப்டனின் ரோஸ் பௌல் மைதானத்தில் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு
இந்த தொடருக்காக ஒரு மாதத்திற்கும் மேல் மேற்கிந்திய தீவுகளின் அணி வீரர்கள் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர். முதலில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர், பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு நடத்தப்பட உள்ள இந்த போட்டிகளுக்கு சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மாற்று திட்டம்
இதனிடையே, எச்சில் பயன்பாட்டிற்கு ஐசிசி தடை விதித்துள்ள நிலையில், பந்தை ஷைன் செய்ய வேறு திட்டம் வைத்துள்ளதாக மேற்கிந்திய தீவுகளின் பௌலர் கெமர் ரோச் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் சோதனை முயற்சியில் திட்டம் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பௌலர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனதளவில் தயாராவது சிரமம்
இந்த தொடருக்காக இங்கிலாந்தில் இறங்கியது முதலே அணி வீரர்கள் அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் கெமர் ரோச் தெரிவித்துள்ளார். புதிய விஷயங்களுக்காக மனதளவில் தயாராவது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் விளையாடுவது சிரமம் என்றும் கூறிய ரோச், ஆனால் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும்போது, அதன்மீது முழுக்கவனமும் சென்றுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

9வது வீரர் என்ற சாதனை
இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவதன்மூலம் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்யும் 9வது மேற்கிந்திய தீவுகளின் வீரர் என்ற பெருமையும் கெமர் ரோச்சுக்கு கிடைக்கவுள்ளது. இதுவரை 193 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், இந்த தொடரில் அந்த சாதனையை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications