மும்பையில் சிஎஸ்கே பயிற்சி
ஐபிஎல் 2021 தொடர் இன்னும் 8 தினங்களில் துவங்கவுள்ளது. தொடரின் இரண்டாவது போட்டி மும்பையில் நடைபெறவுள்ள நிலையில், அதில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்கென இரு அணிகளும் மும்பையில் தங்களது பயிற்சி முகாம்களை மாற்றியுள்ளன.
ஹாசல்வுட் வெளியேற்றம்
இந்நிலையில் அதிகமான தொடர்களை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், தான் ஐபிஎல்லின் இந்த சீசனில் இருந்து வெளியேறுவதாக சிஎஸ்கேவின் முக்கிய பௌலரான ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாசல்வுட் அறிவித்துள்ளார். லுங்கி நிகிடியும் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ள நிலையில், முதல் போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.
விரைவில் அறிவிப்பு
இந்நிலையில் ஹாசல்வுட்டிற்கு பதிலாக மாற்று வீரர் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் அணி நிர்வாகம் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாற்று வீரர் குறித்த எதிர்பார்ப்பு
கடந்த சீசனில் ப்ளே-ஆப் சுற்றிற்குகூட முன்னேறாமல் வெளியேறிய சிஎஸ்கே இந்த சீசனில் கோப்பையை கைப்பற்றும் வகையில் அணியை பலப்படுத்தியுள்ளது. அணியில் ஷர்துல் தாக்கூர், சாம் கரண், தீபக் சஹர், பிராவோ, லுங்கி நிகிடி என பௌலிங் ஆர்டர் பலமாக உள்ள நிலையில் அடுத்ததாக ஹாசல்வுட்டிற்கு பதிலாக அணியில் இணையவுள்ள பௌலர் குறித்து ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.