
சிஎஸ்கே வெற்றி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஆர்சிபியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சீசனில் அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது.

மாற்றம் செய்ய நேரமில்லை
கடந்த சீசனில் ப்ளே ஆப் சுற்றிற்குகூட முன்னேறாமல் வெளியேறியது சிஎஸ்கே. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங், கடந்த சீசனில் இறுதி நேரத்தில் ரெய்னா மற்றும் ஹர்பஜன் வெளியேறிய நிலையில், மாற்றங்களை செய்வதற்குகூட நேரமில்லாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

சிறப்பான வெற்றி
ஆயினும் இறுதி 3 போட்டிகளில் மாறறங்களை கொண்டுவந்து தொடர் வெற்றிகளை பெற்றதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதுமுதல் வீரர்களின் திறமை உள்ளிட்டவற்றில் சிஎஸ்கே தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அதையொட்டி இந்த சீசனில் தங்களது போட்டி மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிளமிங் பெருமை
கடந்த சீசனில் அப்படியே வெளியில் சென்றுவிடவில்லை என்றும் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திவிட்டு தான் வெளியேறியதாகவும் அவர் மேலும் கூறினார். ப்ளே-ஆப்பிற்கு முன்னேற ஒன்றிரண்டு போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டதாகவும் அதைத்தான் தாங்கள் தவற விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

சிறப்பாக விளையாடி வருகிறோம்
இந்த சீசனில்சென்னையில் விளையாடவில்லை என்றாலும் சிறப்பாக மற்றும் வேகமாக விளையாட வேண்டியதன் அவசியம் குறித்து குறிப்பிட்டுள்ள பிளமிங், அதைத்தான் தற்போது செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தாங்கள் சிறப்பான அணி என்று கூற விரும்பவில்லை என்றும் ஆனால் தற்போது சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications











