கொழும்பு: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாங்களும் அபாயகரமான அணியாக இருப்போம் என்று வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியை மீண்டும் ஆசியக் கோப்பை தொடரில் வீழ்த்தி இருக்கிறது வங்கதேச அணி. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியை வீழ்த்தியதன் மூலமாக ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் 3வது இடத்தில் வங்கதேச அணி முடித்திருக்கிறது. இரண்டாம் நிலை இந்திய அணி விளையாடி இருந்தாலும், அவர்களில் திலக் வர்மா மட்டுமே உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படாத ஒரே வீரராவார்.

இதனால் வங்கதேச அணியின் வெற்றியை அவ்வளவு எளிதில் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக உலகக்கோப்பை தொடருக்கான சரியான அணியையும் வீரர்களையும் வங்கதேச அணி கண்டறிந்துள்ளது. அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான அக்சர் மற்றும் ஜடேஜாவால் எதையும் செய்ய முடியாது என்பதை ஷகில் அல் ஹசனின் பேட்டிங் மூலமாக ரசிகர்கள் அறிந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியை வீழ்த்திய பின் வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசுகையில், இந்தப் போட்டியில் வங்கதேச அணிக்காக அதிகம் விளையாடிடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினோம். கொழும்பு ஆடுகளத்தில் இரு போட்டிகளில் விளையாடிய பின், ஸ்பின்னர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று தெரிந்தது. அதேபோல் பேட்டிங்கின் போது விரைவாக விக்கெட் வீழ்ந்ததால், நான் களத்தில் அதிக நேரம் விளையாட முடிந்தது.

இந்த ஆடுகளம் சவால் நிறைந்த ஒன்றுதான். தொடக்க வீரர்களில் நல்ல ஸ்விங்காகிறது. சில நேரம் விளையாடி பந்தை பழையதாக மாறிய பின், நன்றாக ரன்கள் சேர்க்க முடிகிறது. மெஹதி ஹசனை பொறுத்தவரை, அவர் பந்துவீசிய நேரம் சாதாரணமவை அல்ல. சரியான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை எங்கள் பக்கம் திரும்பினார். ஒரு ஸ்பின்னராக ஆட்டத்தின் இறுதி நேரத்தில் 5 ஓவர்களை வீசியது சாதாரண விஷயமல்ல.
இளம் வீரர் தன்சிம் சிறப்பாக தொடங்கி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணியில் ஏராளமான வீரர்கள் காயத்தால் அவதியடைந்து வருகின்றனர். சில வீரர்கள் சொந்த காரணங்களால் விலகி இருக்கிறார்கள். சில போட்டிகளில் தோல்விக்கு அதுவும் காரணமாக மாறியது. நாங்கள் சிறந்த அணியை கண்டறிந்துள்ளோம் என்று நினைக்கிறேன். அடுத்து வரும் உலகக்கோப்பை தொடரில் நாங்கள் அபாயகரமான அணியாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.