மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பேட்டிங் ஃபார்மை பொறுத்தே உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று இந்திய அணி சொந்த மண்ணில் சாதனை படைத்ததை போல், மீண்டும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியின் செயல்பாடோ உலகக்கோப்பை வெல்வதற்கான எந்தவித சிக்னலையும் இதுவரை கொடுக்கவில்லை.

ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரின் நிலை குறித்து முழுமையான தகவல் இல்லை. 11 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ள பும்ராவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதும் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் 4 மாதங்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் தயாராகி வருகிறார்கள். இருவருமே மிகப்பெரிய காயத்தால் அறுவை சிகிச்சைக்கு பின் திரும்ப உள்ளார்கள்.
அறுவை சிகிச்சைக்கு பின் கம்பேக் கொடுப்பது எவ்வளவு கடினம் என்பது நன்றாக தெரியும். அதனால் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், பேட்டிங் ஃபார்ம் உள்ளிட்டவை பார்த்த பின்னரே தேர்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படும். ஆசியக் கோப்பை தொடருக்கான தேர்வு குழு உடனான கூட்டம் இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ளது. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி சிறந்த ஆலோசனை இருக்கும். அதேபோல் எந்த வீரரும் நேரடியாக தேர்வு செய்யப்பட போவதில்லை. ஒவ்வொரு வீரரும் தங்களின் இடத்திற்காக போராட வேண்டியதிருக்கும்.
உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு ஏராளமான வீரர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது. ஆனால் எங்களை பொறுத்தவரை எந்த காம்பினேஷன் சரியானது என்பது பற்றி ஆலோசிப்போம். அதேபோல் உலகக்கோப்பைத் தொடருக்கு முன் ஆசியக் கோப்பை தொடர் இருப்பதையும் நாங்கள் மறக்கவில்லை. இளம் வீரர்கள் சிலர் அழுத்தமான தருணங்களில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வெற்றிபெற வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், எங்களிடம் உள்ள கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் ஆசியக் கோப்பைத் தொடரில் சிறந்த அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். மிடில் ஆர்டரில் அதிக வீரர்கள் போட்டியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு மட்டுமல்லாமல், அனைவரும் நன்றாக விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.