பார்படாஸ்: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அடைந்த தோல்வி காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. வரலாற்றில் அனைத்து அணிகளையும் இடதுகையால் டீல் செய்த அணிக்கா இப்படியொரு நிலைமை என்று ஏராளமான ரசிகர்கள் புலம்பினர். ஆனால் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங், ரசிகர்களிடையெ கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரிலேயே மேயர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அதனேஸ் 22 ரன்களிலும், கிங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 45 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அண்இ 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஹோப் - ஹெட்மயர் கூட்டணி சிறிது நேரம் விக்கெட் கொடுக்காமல் விளையாடியது. சிறிய பார்ட்னர்ஷிப் உருவாகிய நிலையில், ஜடேஜா பந்தில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஹெட்மயர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பவல் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவின் ஆரம்பமானது. இதன்பின் வந்த வீரர்கள் சீட்டு கட்டைப் போல் சரிந்தனர்.
ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், குல்தீப் யாதவும் பந்துவீசட்டும் என்று ரோகித் சர்மா அவரின் கையில் பந்தை கொடுத்தார். இதற்காகவே காத்திருந்த குல்தீப் யாதவ், வெறும் 3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 114 ரன்களுக்கு முடித்து கட்டினார். அந்த அணியின் கேப்டன் ஹோப் மட்டும் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.