
முடங்கிய சர்வதேச போட்டிகள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை துவக்க ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும் எச்சில் பயன்பாட்டிற்கு தடை உள்ளிட்ட பல்வேறு இடைக்கால விஷயங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இந்நிலையில் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. இதற்கென மேற்கிந்திய தீவுகள் அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணியின் வீரர்கள் நேற்று இங்கிலாந்து சென்று சேர்ந்தனர். முதல்கட்டமாக அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இதற்கிடையில் பயிற்சியிலும் ஈடுபட உள்ளனர்.

ஜேசன் ஹோல்டர் கருத்து
கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டிகள் மிகப்பெரிய முன்னேற்றம் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். மீண்டும் போட்டிகளில் விளையாடுவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்திருந்த நிலையில் ஹோல்டர் இவ்வாறு கூறியுள்ளார்.

வீரர்களுக்கு காலஅவகாசம்
முன்னதாக இந்த தொடர் இந்த மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மாதம் தள்ளி நடத்தப்படவுள்ளது. முதல் போட்டி ஜூலை 8ம் தேதி சௌதாம்ப்டனின் ஏஜியஸ் பௌலிலும் அடுத்த இரண்டு போட்டிகள் ஓல்ட் ட்ரபோர்டிலும் நடைபெறவுள்ளன. ஐசிசியும் புதிய வழிமுறைகளை வகுத்துள்ள நிலையில், இதற்கெனவும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வீரர்களுக்கு காலம் தேவைப்படும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











