பார்படோஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி, மூன்றாவது அம்பயரின் நான்கு தவறான தீர்ப்புகளுக்கு நியாயம் கேட்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று நிறைவடைந்தது. அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்றாவது அம்பயர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் நான்கு தவறான முடிவுகளை வழங்கியிருந்தார். இது குறித்து கிரிக்கெட் உலகில் பரவலாக விவாதம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி, குறிப்பிட்ட அந்த மூன்றாவது அம்பயர் சில காலமாகவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல தவறான முடிவுகளை அளித்து வருவதாகவும், வேண்டும் என்றே இதை அவர் செய்கிறாரா? எனவும் கேட்டு வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
இவ்வாறு நடுவருக்கு எதிராகப் பேசுவது சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் (ICC) விதிப்படி தவறு எனச் சுட்டிக்காட்டி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி மீது குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தகுதி நீக்கப் புள்ளி (demerit point) வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் இதுவே அவரது முதல் தவறு ஆகும்.
மேட்ச் ரெப்ரீ ஜவகல் ஸ்ரீநாத் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டேரன் சமி ஏற்றுக்கொண்டதால், எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை; அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையை பேசியதற்காக டேரன் சமிக்குத் தண்டனை அளிப்பதா என கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
மேலும், அம்பயர் பற்றிப் பேசியதற்காகத் தண்டனை அளிக்கும் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு, அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்விக்குக் காரணமாக இருந்த, தவறான முடிவுகளை அளித்த நடுவருக்கு என்ன தண்டனை அளிக்கப் போகிறது? எனவும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஏனெனில், தவறான முடிவுகளை அளிக்கும் அம்பயர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் சுட்டிக்காட்டி இருந்தார். அம்பயர் அளிக்கும் தவறான முடிவுகளால் கிரிக்கெட் வீரர்களாகிய எங்களின் இடம் பறிபோகும், எங்களது வாழ்க்கை அவரது முடிவில் இருக்கிறது. ஆனால், அவர் தவறான முடிவுகளை அளித்தாலும் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனச் சுட்டிக்காட்டி இருந்தார்.