3வது போட்டி விறுவிறு
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 117 நாட்களாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் துவங்கி நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமன் செய்துள்ளன. இதனிடையே ஓல்ட் ட்ரபோர்டில் 3வது மற்றும் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது.
கெமர் ரோச் சாதனை
இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். தொடரின் 3வது போட்டியில் 200 விக்கெட்டுகள் சாதனையை அவர் மேற்கொண்டுள்ளார். கடந்த 1994ல் முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் வீரர் எல்கான் ஆம்ப்ரோஸ் இந்த சாதனையை மேற்கொண்ட நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரோச் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
9வது வீரர் என்ற பெருமை
200 விக்கெட்டுகள் சாதனையை மேற்கொண்ட 9வது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் என்ற பெருமை இதன்மூலம் கெமர் ரோச்சிற்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்சின் விக்கெட்டை நேற்று வீழ்த்தியதன்மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோச்.
கெமர் ரோச் மகிழ்ச்சி
இதனிடையே, இந்த சாதனையை தான் நிகழ்த்தியது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக கெமர் ரோச் தெரிவித்துள்ளார். ஆனால் 300 விக்கெட்டுகளை வீழ்த்துவதே தன்னுடைய குறிக்கோள் என்றும் அவர் கூறினார். அந்த இலக்கை அடைவதற்காக தான் கடுமையாக உழைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.