பார்படாஸ்: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 99 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது முதல் ஒரு நாள் போட்டி பாரம்பரியமிக்க பார்படாசில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய முகேஷ் குமார் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கிங் - கைல் மேயர்ஸ் கூட்டணி களமிறங்கியது. அதில் ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரிலேயே மேயர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்து அதிரடியாக ஆடிய இளம் வீரர் அதனேஸ் 22 ரன்களில் ஜடேஜாவின் அசத்தலான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இதன் மூலம் அறிமுக வீரர் முகேஷ் குமார் ஒருநாள் போட்டிகளில் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் நிதானமாக ஆடிய பிரண்டன் கிங் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் 17 ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஷாய் ஹோப் - ஹெட்மயர் கூட்டணி இணைந்தது. இருவருமே நிதானமாக ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா, உம்ரான் மாலில் - ஜடேஜா ஆகியோரை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
இதில் ஜடேஜா வீசிய பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த நினைத்துய் ஹெட்மயர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரோவ்மன் பவல் 4 ரன்களிலும், ரொமாரியோ ஷெப்பர்ட் ரன் ஏதும் எடுக்காமலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இவர்கள் ஒருவரையும் டெஸ்ட் போட்டி பாணியில் ஃபீல்டிங் அமைத்து இந்திய அணி வீழ்த்தியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் குல்தீப் யாதவ் அட்டாக்கில் வர அவரிடமும் ட்ரேக்ஸ் 3 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 99 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.