நாட்டிங்ஹாம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், முன்னாள் வீரர் கார்ல் கூப்பரின் சாதனையை சமன் செய்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு தொடங்கி இருக்கும் உலக கோப்பை தொடரில் 2வது போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டி பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட போட்டியாகும்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் பேட் செய்யுமாறு கூறியது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், தாமஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.105 ரன்கள் எடுத்ததன் மூலம் உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது குறைந்த ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது.
இந்த போட்டியில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. போட்டியில் பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் கேட்சை பிடித்த கிறிஸ் கெயில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் என்ற பட்டியலில் முன்னாள் வீரர் கார்ல் கூப்பரின் சாதனையை சமன் செய்திருக்கிறார். கார்ல் கூப்பர் 120 கேட்சுகளை பிடித்திருக்கிறார்.
பிரெய்ன் லாரா 117 கேட்சுகளை பிடித்திருக்கிறார். விவியன் ரிச்சர்ட்ஸ் 100 கேட்சுகளையும், 75 கேட்சுகளை ரிச்சி ரிச்சர்ட்சனும் பிடித்துள்ளனர். கெயிலை தவிர மற்ற வீரர்களும் அனைவரும் ரிட்டயர்டு ஆகிவிட்டதால் இன்னும் ஒரு கேட்ச் பிடித்தால் சொந்த அணிக்காக அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இந்த தொடரில் கிறிஸ் கெயில் இறுதி கட்டத்தில் துணை கேப்டனாக அறிவிக்கப் பட்டார். அதிரடிக்கு பெயர் போன அவருக்கு ஒரு வகையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எடுத்த இந்த நடவடிக்கை ஒரு ஆறுதலாக இருந்தது என்று கூறலாம்.
உலக கோப்பை தொடரில், அபாரமான பேட்டிங் லைன் அப் வைத்திருக்கும் அணிகளில் வெஸ்ட் இண்டீஸ். எனவே நீண்ட இடைவெளிக்கு பிறகு, அந்த அணி கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.