ஆன்டிகுவா: எங்களுக்கு போட்டி ஊதியம் தருவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் கூறுவது ஒரு ஜோக் என்பதால், எனது ஊதியத்தை நற்காரியங்களுக்காக நானே நன்கொடையாக அளிக்க தயாராக உள்ளேன் என்று அந்த அணி வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த, டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அதுவரை அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தையெல்லாம் மேற்கிந்திய தீவுகள் உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் அணியின் கேப்டன், டேரன் சமி கொட்டி தீர்த்துவிட்டார்.
டேரன் சமி கூறுகையில், எங்கள் அணிக்கு ரவ்லே லீவிஸ் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு எந்த அணியிலும் அவர் மேலாளராக இருந்து அனுபவமே இல்லாதவர். எங்களுக்கு சீருடையோ, சீருடை மீதான பிரிண்டிங்கோ கூட செய்யப்படவில்லை.
நாங்கள் இப்போது அணிந்துள்ள அணிக்கான சீருடை வாங்கி தருவதில் நிர்வாகம் குளறுபடி செய்தது. இதனால் ஒட்டு மொத்த அணி சீருடை வாங்கவும் நான்தான் கடன் கொடுத்து உதவினேன்.
டி20 உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் வெல்ல வேண்டும் என்று கிரனெடா பிரதமர் கெயித் மிட்சேல் காலையில், வாழ்த்து மெசேஜ் அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்து செய்தி எங்களுக்கு உத்வேகம் தந்தது. அவருக்கு நன்றி. ஆனால் எங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் அதைக்கூட செய்யவில்லை. இவ்வாறு சமி விளாசி தள்ளிவிட்டார்.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் கிறிஸ் கெயிலும் கருத்து கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கெயில் கூறுகையில், நல்ல வேளையாக போட்டியில் வெற்றி பெற்றதற்காக பரிசு தொகை கிடைத்தது. மற்றபடி மேற்கிந்திய தீவுகள் அணி வாரியம் சம்பளம் அளிக்கும் என்பதெல்லாம் ஜோக்தான். சம்பளம் தந்தால் அதை நற்காரியங்களுக்கு நன்கொடையாக அளித்துவிடுவேன் என்றார் கெயில்.