ட்ரினிடாட்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை விராட் கோலி - ஜடேஜா இணை தொடங்கியது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 121 ரன்களிலும், ஜடேஜா 60 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 25 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெய்லண்டர்களை எதிர்முனையில் வைத்துக் கொண்டு, பவுண்டரிகளை விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14வது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த அரைசதத்தில் 8 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியாக இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இறுதியாக ரவிச்சந்திரன் அஸ்வின், 78 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட்டது. குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் கேப்டன் பிராத்வெயிட் - தேஜ்நரைன் சந்தர்பால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் உனாத்கட் அட்டாக்கை தொடங்கினர். இவர்களை சிறப்பாக கையாண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, நிதானமாக ரன்களை சேர்த்தது.
விக்கெட்டுகள் வராத காரணத்தால், அஸ்வின் - ஜடேஜா கூட்டணி அட்டாக்கில் வந்தது. இவர்களையும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சிறப்பாகவே எதிர்கொண்டவர். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஜடேஜா பந்தில் தேஜ்நரைன் சந்தர்பால் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த அறிமுக வீரர் மெக்கன்சி அதிரடியாக சிக்சர், பவுண்டரியை விளாசினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்தது.