
டெல்லி: இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்த டி-20 போட்டியில் ஐசிசி உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது.
கடந்த ஆண்டில் வீசிய புயல்களால், வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஐசிசி உலக அணிகள் இடையே ஒரு டி-20 போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.

ஐசிசி அங்கீகாரம் வழங்கியுள்ள இந்த ஆட்டம், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் உலக லெவன் அணியில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் விளையாடினார்.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. எவின் லூயிஸ் 58, மர்லோன் சாமுவேல் 43, தினேஷ் ராம்தான் 44, ஆந்தரே ரசல் 21 ரன்கள் எடுத்தனர். உலக லெவன் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய உலக லெவன் அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தெசேரா பெரீரா அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேஸ்ரிக் வில்லியம்ஸ் 3, சாமுவேல் பாத்ரி, ரசல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.