மும்பை: மகளிர் உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட்டில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
5-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலாவதாக பைனலுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ஹேய்லே மாத்யூஸ் (16), ஸ்டெபினி டெய்லர் (25) ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய பிரிட்னி கூப்பர் 42 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் சோபி அற்புதமாக பந்து வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
144 ரன்கள் எடுத்தால் பைனலுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பேட்டிஸ் (12), பிரிஸ்ட் (6), டெவினி (22), ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். நியூசிலாந்த அதிகபட்சமாக சாரா மெக்லாசன் ( 38), சாட்டர்த்வெய்ட் (24), ரன்கள் சேர்த்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொதப்பியதால் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. அந்த அணி
20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த 137 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரும் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் பைனலில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.