பார்படாஸ்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று மிரட்டியுள்ளது.
இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் கூட முழுமையாக விளையாடாமல் 40.5 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து 182 ரன்கள் என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கிங் - மேயர்ஸ் இணை தொடக்கம் கூட்டணியாக களமிறங்கியது. அதில் மேயர்ஸ் தனக்கே உரிய அதிரடி பாணியை கையில் எடுத்து வெளுத்து கட்டினார். முதல் ஓவர் முதலே அதிரடியாக ஆடிய அவரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். இதன் காரணமாக 8.1 ஓவர்களிலே வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களை கடந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் அட்டாக்கில் கொண்டு அவரப்பட்டார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே மேயர்ஸ் 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதே ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான கிங் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து வந்த அதனேஸ் மீண்டும் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின்னர் வந்த ஹெட்மயர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹோப் - கேசி கார்ட்டி கூட்டணி சேர்ந்தது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய இரு வீரர்களும் எந்தவித அவசரமும் இல்லாமல் பேட்டிங் செய்தனர். இதனால் இவர்கள் இருவரையும் இந்திய பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. சிறப்பாக ஆடிய ஹோப் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ஒருநாள் போட்டிகளுக்கு பின் முதல்முறையாக வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடருக்கு கூட தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.