கோலி - கும்ப்ளே மோதல்
அனில் கும்ப்ளே இந்திய அணிக்கு 2016 முதல் சுமார் ஓராண்டுக்கு மேல் பயிற்சியாளராக இருந்தார். அப்போது தான் இந்திய அணி பெரிய முன்னேற்றத்தை கண்டது. எனினும்,, கேப்டன் கோலிக்கு, கும்ப்ளேவுடன் விரிசல் தொடங்கியது.
வெடித்த விரிசல்
2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் கோலி - கும்ப்ளே விரிசல் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அப்போது ஊடகங்கள் வரை வந்தது இந்த விரிசல். இந்தியா சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
கும்ப்ளே பதவி விலகினார்
அதன் முடிவில் அனில் கும்ப்ளே தானாகவே பதவி விலகி சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். எனினும், அப்போதே கோலி கொடுத்த அழுத்தத்தால் தான் அனில் கும்ப்ளே பதவி விலக நேரிட்டது என கூறப்பட்டது.
என்ன நடந்தது?
இதுவரை அரசல் புரசலாகவே இருந்த இந்த விவகாரத்தில் முதன் முறையாக நேரடியாக சம்பந்தப்பட்ட முன்னாள் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் என்ன நடந்தது என கூறி இருக்கிறார்.
நீட்டித்து இருப்பேன்
அவர் கூறுகையில், அனில் கும்ப்ளே தான் சிறந்த பயிற்சியாளர். அவரது ஒப்பந்தத்தில் பதவி நீட்டிப்புக்கு வாய்ப்பு இருந்திருந்தால் நான் நேரடியாக பதவி நீட்டித்து இருப்பேன். ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்றார். அனில் கும்ப்ளே மீண்டும் பயிற்சியாளராக பதவி நீட்டிப்பு செய்ய பிசிசிஐ தயாரான நிலையில் தான் கோலி எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வினோத் ராய் சமாதானம்
வினோத் ராய் அப்போது கோலியிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசி கும்ப்ளேவை பயிற்சியாளராக தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம் என பேசி இருக்கிறார். அதற்கு கோலி மசியவில்லை.
சச்சின் பேசினார்
அடுத்து அப்போது பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய குழுவில் இருந்த சச்சினிடம் உங்களைப் போன்ற ஒரு ஜாம்பவான் பேசினால் அவர் ஒப்புக் கொள்ளலாம் என கூறி இருக்கிறார். அப்போது சச்சின் பேசியும் கோலி மசியவில்லை.
கங்குலி நீண்ட நேரம் பேச்சு
அடுத்து கங்குலி நீண்ட நேரம் கோலியிடம் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நீட்டிக்க பேசி இருக்கிறார். அப்போதும் கோலி ஒப்புக் கொள்ளவில்லை. எல்லோரும் பேசி தோற்ற அதே வேளையில், அணிக்குள் இது பெரிய பூசலாக மாறிக் கொண்டு இருந்தது.
பலிகடா ஆன பயிற்சியாளர்
இது போன்ற சூழ்நிலையில் பயிற்சியாளர் தான் பலிகடா ஆக்கப்படுவார். மேலும், இந்த விவகாரம் பொது வெளியில் துவைத்து காயப் போடப்பட்டது. ஆனால், கும்ப்ளே அவராகவே விலகி விட்டார். அதனால், அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு என்றார் வினோத் ராய்.
இன்று நடந்தால்..
இதே விவகாரம் இன்று கங்குலி தலைவர் ஆக இருக்கும் போது நடந்தால், கங்குலி, கும்ப்ளேவை தான் பயிற்சியாளராக வைத்துக் கொள்ள வேண்டும் என கோலியின் கழுத்தில் வைத்து அழுத்தி இருப்பார். ஆனால், அதனால் சிக்கல் தான் வரும் என்றும் கூறினார் வினோத் ராய்.