சென்னை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இடையிலான சதங்கள், பேட்டிங் சாதனைகள் உள்ளிட்ட ஏராளமான ஒற்றுமைகள் இருந்தாலும், அடிப்படையான விஷயங்கள் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. அதனை பற்றி பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை சுனில் கவாஸ்கர், அவருக்கு பின் சச்சின் டெண்டுல்கர், அவருக்கு பின் விராட் கோலி என்று கடந்த 50 ஆண்டுகளாக உலகம் போற்றும் பேட்ஸ்மேன்களை உருவாக்கி வருகிறது. அதில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அவருக்கு பின் வந்த விராட் கோலி தனது பேட்டிங்கில் சச்சினின் சாதனைகளை தகர்ந்தெறிந்து வருகிறார். இருவருக்கும் சாதனைகளில் ஒற்றுமைகள் இருந்தாலும், அடிப்படையாக விஷயங்களில் வேற்றுகளுடன் இருக்கிறார்கள்.

குறிப்பாக பிளேயிங் ஸ்டைலிலேயே சச்சின் - விராட் கோலி இடையில் பெரும் வித்தியாசம் உள்ளது. சச்சின் டெண்டுல்கர் கிளாசிக் ரகத்தில் டெக்னிக்கலாகவும் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். அதேபோல் டென்னிஸ் டெல்போ காயத்திற்கு பின் ஸ்வீப் ஷாட், அப்பர் கட், ஃபிளிக் ஷாட் என்று புதிய ஷாட்களை உடலின் தன்மைக்கேற்ப விளையாடக் கூடியவர். ஆனால் விராட் கோலியோ மாடர்ன் டே கிரிக்கெட் வீரர்களை போல் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர்போனவர். பெரும்பாலும் ஆஃப் திசையில் அதிக ரன்களை விளையாடக் கூடிய வீரராக இருக்கிறார்.
அதேபோல் தப்பித் தவறி கூட விளையாட விராட் கோலி ஸ்வீப் ஷாட்களை விளையாட மாட்டார். என்னதான் பயிற்சிகளின் போது ஸ்வீப் ஷாட்கள் விளையாடினாலும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலும் நேராக நின்றே விளையாட கூடியவர். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த போதே சச்சின் டெண்டுல்கர் ஃபிட்னஸ் பற்றி அதிக கவலை கொண்டதில்லை. ஆனால் விராட் கோலியோ 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபிட்னஸில் நம்பர் 1ஆக உள்ளார்.
அதேபோல் பேட்டிங்கை பொறுத்தவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை விளாசிய வீரர் சச்சின் டெண்டுல்கர். இன்று வரை அவரின் சாதனையை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை. ஆனால் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம் மற்றும் 12 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையுடன் வலம் வருகிறார். அண்மையில் கூட 25 ஆயிரம் ரன்களை விரைவாக விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அதேபோல் இருவருமே கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த போது கேப்டனாக செயல்பட்டுள்ளனர். வீரராக இருந்தது போன்றே கேப்டனாக செயல்பட்ட போதும் சச்சின் டெண்டுல்கர் அமைதியாகவே செயல்பட்டார். வெகு விரைவாக கேப்டன்சியை கைவிட்டு வெளியேறினார். ஆனால் மறுபக்கம் விராட் கோலியோ வெற்றி, தோல்வியின் போது முன்நின்று அணியை வழிநடத்தினார். ஆக்ரோஷத்திற்கு பெயர்போன இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவையே அலறவிட்டவர்.
இதுவரை 3 உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ளார் விராட் கோலி . அதேபோல் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 6 உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாடி, அதிக உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாடியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.