லண்டன்: ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் - டிராவிஸ் ஹெட் கூட்டணி இணைந்து 4வது விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்துள்ள நிலையில், முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் செய்த தவறுகள் பற்றி காணலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி ஐசிசி கோப்பையை 10 ஆண்டுகளுக்கு பின் இந்தியா கையில் ஏந்தப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் போட்டியை பார்க்க தொடங்கினர். ஆனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவிலேயே, ஆட்டம் இந்திய அணியின் கைகளில் இருந்து நழுவியுள்ளது. 4வது விக்கெட்டுக்கு 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்துள்ள அணி, இனி தோல்வியடைய வாய்ப்புகளே இல்லை.

அதுமட்டுமல்லாமல் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் வேறு மாதிரி பேட்டிங்கை ஆடி வருகின்றனர். முதல் நாள் ஆட்டத்தில் இவர்களுக்கு பந்துவீச்சாளர்கள் எந்த திட்டமும் இல்லாமல் பந்துவீசியதே முதல் தவறு என்று சொல்லலாம். ஏனென்றால் முதல் 12 ஓவர்களில் சிராஜ் - ஷமி இருவரும் பந்தை ஸ்விங் செய்த போது, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறியது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் அந்த பிரஷரை உமேஷ் யாதவ் எளிதாக ரன் சேர்க்க விட்டுக் கொடுத்து ரிலீஸ் செய்தார்.
அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் சேர்க்காமல் பந்து பழசாவதற்காக காத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் டிராவிஸ் ஹெட் ரன்களை அதிரடியாக சேர்த்தார். இதில் டிராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்தி ரன்களை சேர்க்க விடாமல் லைன் மற்றும் லெந்த் பந்துகளை வீசி இருந்தாலே விக்கெட் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால் இந்திய வீரர்களின் கவனத்தை ஸ்டீவ் ஸ்மித் தன் மீது திருப்பி டிராவிஸ் ஹெட் ரன்கள் சேர்க்க வழிவகுத்து கொடுத்தார். இங்குதான் ஆட்டம் கை நழுவ தொடங்கியது.
அதேபோல் லெக் திசை ஃபீல்ட் செட்டை தவிர்த்து ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணியிடம் எந்த திட்டமும் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இதனால் தான் அஸ்வின் என்ற மூளைக்கார கிரிக்கெட்டரின் தேவை எழுந்துள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மைதானங்களில் ஆஸ்திரேலிய வீரர்களின் மூளைக்குள் புகுந்து அஸ்வின் ஒரு பாடுபடுத்திவிட்டார் என்றே கூறலாம். அந்த வாய்ப்பை இந்திய கேப்டன் ரோகித் சர்மா தாமாவே இழந்துவிட்டார்.
இந்த சூழலில் இருந்து இந்திய அணி மீள முடியுமா என்று கேட்டால், இரண்டாம் நாளின் முதல் செஷனிலேயே ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தினால் மட்டுமே அதற்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் ஆஸ்திரேலிய வீரர்கள் இரண்டாம் நாள் முழுவதும் பேட்டிங்கை தொடர்ந்து, பிரம்மாண்ட முதல் இன்னிங்ஸை ஸ்கோரை பதிவு செய்வது நிச்சயம். இதில் கேப்டன் ரோகித் சர்மா செய்த தவறு என்றால், அணித் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஏனென்றால் டாஸ் யார் வென்றிருந்தாலும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்பார்கள்.
அதேபோல் ஜடேஜாவை எப்படி பயன்படுத்தப் போகிறோம், எந்த வேகப்பந்துவீச்சாளருடன் பயன்படுத்தப் போகிறோம் என்ற எந்த திட்டமிடலும் ரோகித் சர்மாவிடம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் வெளிநாடுகளில் ஜடேஜாவின் பந்துவீச்சை பற்றி முன்பே அலசி இருந்தால், அஸ்வினின் தேவையை இந்திய அணி நிர்வாகம் முன்பே உணர்ந்திருக்கும்.