மும்பை: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் 6 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், அதற்கு முன் ஆசியக் கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. இந்த ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன் 6 நாட்கள் பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் 17 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேகப்பந்துவீச்சாளர்களாக நட்சத்திர வீரர் பும்ரா, சிராஜ், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இந்திய அணியின் 4வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார்.
இலங்கையின் சில மைதானங்களில் வேகப்பந்துவீச்சிற்கான பவுன்ஸ் மற்றும் பேஸ் இருக்கும் என்பதால், வேகப்பந்துவீச்சாளர்கள் தேவையாக உள்ளது. ஆனால் 6 வேகப்பந்துவீச்சாளர்கள் தேவையா என்பது விவாதமாகியுள்ளது. ஏனென்றால் பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி ஆகியோரை கடந்து எந்த வீரரும் இந்திய அணிக்குள் வருவது எளிதல்ல.
ஒருவேளை இந்திய அணியின் பேட்டிங் வரிசை நீண்டதாக இருக்க வேண்டுமென்று கருதினால் பும்ரா, ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூருடன் இந்திய அணி களமிறங்கலாம். ஆனால் பிரசித் கிருஷ்ணா இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்து ஸ்பின்னரை இணைத்திருக்கலாம்.
ஏனென்றால் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள். இதில் ஜடேஜா பிளேயிங் லெவனில் ஆடினால் குல்தீப் யாதவ் மட்டுமே ஸ்பின்னராக இருப்பார். ஒருவேளை குல்தீப் யாதவ் காயமடைந்தால், இந்திய அணி ஜடேஜா மற்றும் அக்சர் படேலுடன் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகும். இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் பலரும் சாஹலை இந்திய அணியில் இணைத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.