பார்படாஸ்: உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி தயாராகி வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், பேட்டிங் ஆர்டரில் தொடர்பே இல்லாம செய்து வரும் மாற்றங்கள் ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கான தயாரிப்பை தொடங்கியுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யார் என்பதை முடிவு செய்யும் வகையில் இந்திய அணியின் செயல்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொல்லியதற்கு மாறாக முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விலகியதால், ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளதால், மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் நேரடி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணி தரப்பிலோ 3வது வீரராக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். இதையடுத்து 4வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் அக்சர் படேலை களமிறக்கி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐபிஎல் தொடரில் கூட அக்சர் படேல் 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கியதில்லை. ஆனால் அவரை களமிறக்கி இந்திய அணி சோதனை செய்திருப்பது ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.
அவர் வெறும் 1 ரன்களில் ஆட்டமிழக்க, 5வது வீரராக ஹர்திக் பாண்டியா களமிறங்கி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 6வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளார். முதல் போட்டியை போலவே எந்த திட்டமிடலும் இல்லாமல் இரண்டாவது போட்டியில் இந்திய அணி நிர்வாகம், பேட்டிங் ஆர்டரில் பரமபதம் ஆட்டம் ஆடி வருவது பொறுப்பின்மையையே வெளிப்படுத்துகிறது. இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.