அகமதாபாத்: ஆர்சிபி அணியின் கோ க்ரீன் முன்னெடுப்பை போல், புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் குஜராத் அணி வீரர்கள் லாவண்டர் நிற ஜெர்சி அணிந்து களமிறங்கியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி அணி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான பச்சை நிற ஜெர்சி அணிந்து ஆர்சிபி வீரர்கள் ஒரு போட்டியில் விளையாடுவார்கள்.

தற்போது ஆர்சிபி அணியை பின்பற்றி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில், ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் லாவண்டர் ஜெர்சி அணிந்து குஜராத் அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர். இதுதொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் ட்விட்டர் பக்கத்தில், இன்றைய போட்டியில் ஒரு சிறப்பு காரணத்திற்காக லாவெண்டர் வண்ணங்களை அணிய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
குஜராத் டைட்டன்ஸ் ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளது. புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களுடன் சேருங்கள்" என்று அழைப்பு விடுத்திருந்தது. லாவெண்டர் கலர் ரிப்பன் அனைத்து வகையான புற்றுநோய்களையும் குறிக்கிறது, எனவே இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஹோம் ஆட்டத்தில் குஜராத் அணி இந்த நிறத்தைப் பயன்படுத்தி உள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் போடுவதற்கு முன்பாக ஐதராபாத் அணியின் கேப்டம் எய்டன் மார்க்ரம் ஜெர்சியில் லாவண்டர் நிற ரிப்பனை ஹர்திக் பாண்டியா குத்திவிட்டார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பை செய்கிறோம். அவர்களுக்கு ஆதரவளிக்க இதுவும் வழியாகும் என்று தெரிவித்துள்ளார்.