இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினரை சந்திக்க சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இந்தூரில் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக இளம் வீரர் முகேஷ் குமார் இந்திய அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்திய அணியுடன் பும்ரா இந்தூருக்கு பயணிக்கவே இல்லை.
மொஹாலியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த பின், பும்ரா நேரடியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த நிலையில் பும்ரா வீடு திரும்பியதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டிக்கு பின் இந்திய அணி நிர்வாகம் தான் பும்ராவுக்கு ஓய்வு வழங்கியுள்ளது. இதனால் மொஹாலியில் இருந்து மும்பை திரும்பிய பும்ரா, தனது குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.
அண்மையில் பிறந்த தனது மகன் மற்றும் மனைவி சஞ்சனா ஆகியோருடன் நேரம் செலவிடுவதற்காக பும்ரா வீடு திரும்பி இருக்கிறார். உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளதால், அதற்கு முன்பாகவே குடும்பத்தினரை சந்திக்க பும்ரா முடிவு செய்துள்ளார். இதன் காரணமாகவே பும்ராவுக்கு இரண்டாவது போட்டியில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3வது ஒருநாள் போட்டியில் பும்ரா பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.