பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஜெர்சியை அணிந்து களமிறங்கியதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 23 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்ந்த பின் களமிறங்கிய ரோகித் சர்மா, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இருப்பினும் உலகக்கோப்பை தொடருக்கு கூட தகுதிபெறாத அணியிடம் 5 விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் இழந்தது மோசமான செயல்பாடாக விமர்சிக்கப்படுகிறது.
அதேபோல் சில மாதங்களுக்கு பின் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் வெறும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் களமிறங்கிய போது சூர்யகுமார் யாதவ் இந்திய ரசிகர்களை குழப்பமடைய செய்துவிட்டார் என்றே சொல்லலாம். நேற்றைய ஆட்டத்தின் பிளேயிங் லெவனில் இளம் வீரர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை.
ஆனால் களத்தில் சஞ்சு சாம்சனின் 9 எண் கொண்ட ஜெர்சி அணிந்து வீரர் இருந்தார். இதனால் பிளேயிங் லெவனை ரோகித் சர்மா மறந்துவிட்டாரா என்று மீண்டும் பார்க்கப்பட்ட போது, சஞ்சு சாம்சன் ஜெர்சியுடன் இருந்தது சூர்யகுமார் யாதவ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பவுலிங்கின் போது மாற்றி அணிந்திருப்பார் என்று பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங்கின் போது சஞ்சு சாம்சனின் ஜெர்சியுடன் வந்தார்.
இதற்கான காரணம் என்ன என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவிற்கு கொடுக்கப்பட்ட ஜெர்சியின் அளவு மீடியம் சைஸில் இருந்துள்ளதே காரணமாக அமைந்துள்ளது. வழக்கமாக களத்தில் லார்ஜ் சைஸ் ஜெர்சியை அணியவே சூர்யகுமார் யாதவ் விரும்புவாராம். இதனால் அவருக்கான ஜெர்சி வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், சஞ்சு சாம்சனின் லார்ஜ் சைஸ் ஜெர்சியை அணிந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.