லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதீத ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட விராட் கோலி, இறுதியாக நவீன் உல் ஹக், கைல் மேயர்ஸ், அமித் மிஸ்ரா மற்றும் கவுதம் கம்பீருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடக்கம் முதல் இறுதி வரை என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அண்மையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியை கடைசி பந்தில் லக்னோ அணி வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு பின் லக்னோ அணி வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினர். லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக மைதானத்திற்கு வந்து ஆர்சிபி ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து "keep Quiet" என்று செய்கை செய்தார். இது விராட் கோலியின் தன்மானத்தை சீண்டி பார்க்கும் வகையில் அமைந்தது.

இதனால் லக்னோ மைதானத்தில் களமிறங்கிய நொடி முதலே விராட் கோலி அதீத ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். ஒவ்வொரு விக்கெட்டுக்கும் விராட் கோலியின் ஆக்ரோஷம் உச்சத்தை எட்டியது. கேட்ச் பிடித்துவிட்டு "keep quiet" என்று செய்கை செய்வது, ஆயுஷ் பதோனிக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து வழியனுப்புவது என்று விராட் கோலியின் உள்ளே இருந்த பீஸ்ட் வெளிப்பட்டது. இதனிடையே 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அமித் மிஸ்ரா - நவீன் உல் ஹக் இணை நிதானமாக ஆடியது.
இதனிடையே நவீன் உல் ஹக் களத்தில் இருந்த போது, அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் விராட் கோலி ஷூ-வை காட்டினார். இதனால் இருவரும் நீண்ட நேரமாக பார்வையால் சீண்டி கொண்டனர். அப்போது அமித் மிஸ்ரா, விராட் கோலியை பார்த்து "எதற்காக இவ்வளவு ஆக்ரோஷம்.. தேவையில்லையே" என்பது போல் கேட்டார். அதனை ஏற்காத விராட் கோலி, நேரடியாக நடுவர் முன்னிலையில் அமித் மிஸ்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்பின்னர் ஆட்டம் முடிவடைந்த பின் வீரர்கள் அனைவரும் கை குலுக்கி விடைபெற்றனர். அப்போது நவீன் உல் ஹக்கிடம் விராட் கோலி கை குலுக்கும் போது ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். இதற்கு நவீன் உல் ஹக் பதிலடி கொடுக்கும் வகையில் பேச, விராட் கோலி பதிலளித்தார். அங்கே மீண்டும் வாக்குவாதம் எழுந்த நிலையில், மேக்ஸ்வெல் நவீன் உல் ஹக்கை கட்டுப்படுத்தினார். அதேபோல் கவுதம் கம்பீருடனும் விராட் கோலி கை குலுக்கும் போது ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.
இதையடுத்து லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் விராட் கோலியிடம் பேசிக் கொண்டே வந்த போது, கவுதம் கம்பீர் வந்து மேயர்ஸை அழைத்து சென்றார். அப்போது கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி வார்த்தைகளை விட்டார். இன்னும் சொல்லப் போனால், கம்பீரை விராட் கோலி தான் வம்புக்கு இழுத்தார். இதனால் கோபமடைந்த கம்பீர் நேரடியாக விராட் கோலியுடன் சண்டைக்கு சென்றார். அவரை கேப்டன் கேஎல் ராகுல் கட்டுப்படுத்தி அனுப்பி வைக்க, மீண்டும் விராட் கோலி வார்த்தைகளை விட்டார்.
இதனால் கோபமடைந்த கம்பீர், அனைவரையும் கடந்து விராட் கோலியுடன் சண்டைக்கு நின்றார். அப்போது கம்பீரை நோக்கி விராட் கோலியும் வர, மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு அணியின் அனைத்து நிர்வாகிகள், வீரர்கள் சூழ்ந்திருக்க விராட் கோலி - கவுதம் கம்பீர் இடையே வாக்குவாதம் உச்சத்திற்கு சென்றது. பின்னர் ஒரு வழியாக கம்பீரை விலக்கி, வீரர்கள் அனைவரும் விராட் கோலியை கட்டுப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
என்னதான ஆட்டத்தின் போது ஆக்ரோஷமாக ஸ்லெட்ஜிங் செய்தாலும், போட்டி முடிவடைந்த பின் சாதாரணமாக கை குலுக்கி செல்வதே வீரர்களுக்கு சரியானதாக இருக்கும். ஆனால் விராட் கோலி களம் விட்டு விலகிய பின்னரும் ஆக்ரோஷத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடையே முகசுளிப்பை ஏற்படுத்தியது. இதனால் விராட் கோலி - கவுதம் கம்பீர் இருவருக்கும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தனித்தனியாக ஆதரவளித்து வருகின்றனர்.