லண்டன் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையால் டிராவானால் யாருக்கு கோப்பை கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியின் போது மழை பெய்தது.
அப்போது போட்டி நடைபெறவில்லை என்றால் கோப்பை யாருக்கு கிடைக்கும் என்ற சந்தேகம் இருந்தது. முன்பெல்லாம் இது போன்ற தொடரில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.

ஆனால் ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அங்கு சும்மா நாளிலேயே மழை அவ்வப்போது பெய்யும். இதனால் முடிவை தெரிந்து கொள்ள ஆறாவது நாளாக ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருக்கிறது. 5 நாளும் முழுமையாக மழை பெய்து ஆட்டம் ரத்தாக வாய்ப்பு குறைவு.
இதனால் போட்டி மழை காரணமாக டிராவாக வேண்டுமென்றால் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படுமா இல்லை புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஐசிசி அளித்துள்ள விளக்கம் படி போட்டி டிராவானால் வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் முடிந்தது என்ற கருத்தில் கொள்ளப்படும்.
இதன் காரணமாக கோப்பை இந்தியா ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கும் பகிர்ந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஒரு நாளில் 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். இதில் மழை காரணமாக சில ஓவர்கள் வீசப்பட முடியாத நிலையில் சென்றால் அந்த விடுபட்ட ஓவர்கள் அனைத்தும் ரிசர்வ் டேக்கான ஆறாவது நாளில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
ஐந்து நாட்களில் ஏதேனும் ஒரு நாள் மழையால் ரத்தனால் கூட ரிசர்வ் டே முழுமையாக பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு நாளில் பத்து ஓவர்கள் வீச முடியாத நிலை ஏற்பட்டால் ஐந்து நாளையும் சேர்த்து ரிசர்வ் டே அன்று 50 ஓவர்கள் வீசப்படும் என்று ஐசிசி கூறியுள்ளது. இதனால் நிச்சயமாக யார் வெற்றியாளர்கள் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதேசமயம் 5 நாட்களிலும் 90 ஓவர்கள் முழுமையாக வீசப்பட்டு ஐந்தாவது நாள் முடிவில் ஆட்டம் டிராவை நோக்கி சென்றால் ரிசர்வ் டே பயன்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர்கள் குறைந்தாலும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டாலும் மட்டும்தான் பயன்படுத்தப்படும் என்பது இதற்கு பொருள்.