ஸ்கூலுக்கு போகாமல் இங்கிலாந்து சென்ற குட்டி சச்சின்.. வியந்து போன வெஸ்ட் இண்டீஸ் வேகப் புயல்!
மும்பை : 2020 ஏப்ரல் 24இல் சச்சின் தன் 47வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். அவர் ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆகியும் அவர் மீதான அந்த ஆர்வம், மதிப்பு எதுவும் குறையவில்லை.
Recommended Video
இன்னமும் விளம்பரப் படங்களில் கூட நடித்து வருகிறார். அவருக்கு இருக்கும் இந்த அளவு கடந்த ரசிகர்களுக்கு பின் அவரது அசைக்க முடியாத திறமை உள்ளது.
பால்ய வயதில் இருந்தே அவருக்கு இருந்த அந்த திறமையால் தான் இளம் வயதில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் ஒருவர் குட்டி சச்சினை பார்த்து வியந்த சம்பவம் ஒன்று நடந்தது.

பாகிஸ்தானில் அறிமுகம்
சச்சின் டெண்டுல்கர் 1989இல் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதுவும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார். பாகிஸ்தான் அணியின் ஸ்விங் மன்னர்கள் கோலோச்சிய அந்த காலகட்டத்தில் அவர்கள் மண்ணிலேயே ஓரளவு சமாளித்து பெயர் பெற்றார்.

இங்கிலாந்து பயணம்
அடுத்த சில மாதங்கள் கழித்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்தது இந்திய அணி. சச்சின் 17 வயதான சச்சின் டெண்டுல்கரும் அந்த தொடரில் பங்கேற்றார். குள்ளமான உருவம் கொண்ட சச்சின், பதின் பருவம் என்பதால் பார்க்க இளம் சிறுவன் போலவே காட்சி அளித்தார்.

கர்ட்லி ஆம்ப்ரோஸ் பார்த்தார்
அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் கலக்கிக் கொண்டு இருந்த வேகப் பந்துவீச்சாளர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் இங்கிலாந்து நாட்டில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்தார். அப்போது ஒரு சமயம் சச்சினை, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பார்த்துள்ளார்.

இங்கே என்ன செய்கிறான்?
அப்போது கர்ட்லி ஆம்ப்ரோஸ் மனதில் தோன்றிய முதல் விஷயம், "இந்த பையன் இங்கே என்ன செய்கிறான்.. இந்தப் பையன் டெஸ்ட் கிரிக்கெட் ஆடக் கூடாது.. பள்ளிக் கூடத்தில் தான் இருக்க வேண்டும்." என தோன்றி உள்ளது. அதே சமயம் சச்சினின் சிறப்பு திறமைகளையும் அடையாளம் கண்டுள்ளார் ஆம்ப்ரோஸ்.

1992 உலகக்கோப்பை
பின்னர் சச்சின் டெண்டுல்கர் - கர்ட்லி ஆம்ப்ரோஸ் களத்தில் சந்திக்கும் தருணம் 1992 உலகக்கோப்பை தொடரில் வந்தது. அப்போது ஆம்ப்ரோஸ் வீசிய அடிக்க முடியாத கடினமான பந்தில், சச்சின் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த சம்பவங்களை பற்றி ஆம்ப்ரோஸ் ஒருமுறை பகிர்ந்து கொண்டார்.

முதன் முறை பார்த்த போது..
"நான் டெண்டுல்கரை முதன் முறை பார்த்த போது அவர் இளம் வீரர். நான் அவருக்கு எதிராக 1992இல் ஆடி உள்ளேன். அவரிடம் நிறைய திறமை உள்ளது. அவர் எப்படியும் சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என எனக்கு தெரியும்." என்றார் ஆம்ப்ரோஸ்.

என்ன நினைத்தேன்?
மேலும், "நான் முதல் முறை அவரை பார்த்த போது இங்கிலாந்தில் இருந்தேன். நான் அப்போது கவுன்டி கிரிக்கெட் ஆடி வந்தேன், அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். எனக்கு நானே அப்போது சொல்லிக் கொண்டேன், "இந்த பையன் இங்கே என்ன செய்கிறான். அவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆடக் கூடாது. பள்ளியில் தான் இருக்க வேண்டும்," என எண்ணினேன்" என கூறியுள்ளார் ஆம்ப்ரோஸ்.

அற்புதமான வீரர்
"பின் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், அந்த வயதில் அவர் ஏதோ சிறப்பாக செய்கிறார். அதனால், அவர் இத்தனை ரன் குவித்ததை பார்த்து நான் வியக்கவில்லை. அவருக்கு எதிராக உலகக்கோப்பையில் ஆடிய போது நான் மூத்த வீரர். எனவே, அவரை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், அவர் அற்புதமான வீரர்" என்றார் ஆம்ப்ரோஸ்.


Click it and Unblock the Notifications