விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய வெற்றியோடு, நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு 2025-ம் ஆண்டின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இனி அடுத்த சில மாதங்களுக்கு இந்திய ஜெர்சியில் இவர்களைப் பார்க்க முடியாது.
ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவர்கள், 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

அதன் பிறகு இந்த ஆண்டு வேறு ஒருநாள் போட்டிகள் இல்லை. இதனால், ரோஹித் மற்றும் கோலி ஜோடியை மீண்டும் மைதானத்தில் பார்க்க ரசிகர்கள் சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஜனவரிக்கு பின் சுமார் ஐந்து மாதங்கள் கழித்து தான் மீண்டும் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
2026-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு மிக முக்கியமானது. 2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்குத் தயாராகும் விதமாக, 2026-ல் இந்தியா மொத்தம் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளது. அவற்றில் விராட் கோலி, ரோஹித் சர்மா முழுமையாக விளையாட வாய்ப்பு உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துத் தொடருடன் இந்தியாவின் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை முன்னோட்டம் தொடங்குகிறது.
ஜனவரி 2026: நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் (இந்தியாவில்).
ஜூன் 2026: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் (இந்தியாவில்).
ஜூலை 2026: இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் (இங்கிலாந்தில்).
செப்டம்பர் - அக்டோபர் 2026: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் (இந்தியாவில்).
அக்டோபர் - நவம்பர் 2026: நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் (நியூசிலாந்தில்).
டிசம்பர் 2026: இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் (இந்தியாவில்).