விராட் கோலி - ரோஹித் சர்மா
2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியுடன் வெளியேறியது. அந்த தோல்விக்கு காரணம் ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி எடுத்த முடிவுகள் தான் என ரோஹித் சர்மா கோபத்தில் இருந்ததாக செய்திகள் வெளியாகின.
முற்றிய மோதல்
அதன் பின், இருவருக்குமான மோதல் குறித்து பல செய்திகள் வெளியாகின. அணியில் இரண்டு குழுக்கள் இயங்குகின்றன. ரோஹித் சர்மா தலைமையில் சிலரும், கேப்டனுக்கு ஆதரவாக சிலரும் உள்ளனர் என கூறப்பட்டது.
கேப்டன் பதவிக்கு போட்டி
அடுத்து, பிசிசிஐ வட்டாரத்தில் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ரோஹித் சர்மாவை ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்க உள்ளதாக கூறினார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இன்ஸ்டாகிராம் விவகாரம்
இந்த நிலையில், ரோஹித் சர்மா, கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்பாலோ செய்து விட்டார் என கூறப்படுகிறது. அனுஷ்கா சர்மாவும் இது குறித்து சூசகமான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
துவக்கம் இதுதான்
கோலி - ரோஹித் சர்மா மோதல் குறித்து அறிந்த சிலர், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது என அந்த சம்பவம் பற்றி கூறினார்கள். அப்போது கோலியின் விளம்பரங்களை கையாண்டு வந்த ஏஜென்சியை தான் ரோஹித் சர்மா - தவான் இருவரும் தங்கள் விளம்பர விவகாரங்களையும் கவனித்துக் கொள்ள நியமித்து இருந்தனர்.
இருவரும் விலகினர்
பின்னர் சில பிரச்சனைகளால் ரோஹித் - தவான் இருவரும் ஒரே நேரத்தில் அந்த ஏஜென்சியிடம் இருந்து விலகி உள்ளனர். அப்போதே, கோலி - ரோஹித், தவான் இடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டு விட்டன என்கிறார்கள். சுமார் இரண்டு ஆண்டு காலமாக கோலி - ரோஹித் பனிப் போர் நடந்து வருகிறது. இது எங்கே போய் முடியும் என்பது தான் தெரியவில்லை.