சேலம்: சிறிய நகரத்தில் இருந்து சாதித்த முதல் கிரிக்கெட் வீரர் தோனி என்று தினேஷ் கார்த்திக் சொன்ன போது, திடீரென ரசிகர்கள் இடைவிடாது சில நிமிடங்கள் எழுப்பிய கரகோஷ வீடியோ சென்னை அணி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிய கிராமத்தில் இருந்து இந்திய அணிக்காக அறிமுகமான நடராஜன், தமிழ்நாடு இளைஞர்கள் மனதில் நம்பிக்கை விதைத்தவர். இவர் சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற இளைஞர்கள் கிரிக்கெட்டில் முன்னேறுவதற்காக மைதானம் ஒன்றை கட்டியுள்ளார். சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள அந்த மைதானத்தில், 4 பிட்ச்கள், உடற்பயிற்சி கூடம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது.

நடராஜன் பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தை இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, இந்திய வீரர் விஜய் சங்கர், நடிகர்கள் யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிராமமக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் பேசுகையில், சிறிய நகரத்தில் இருந்து வந்து சாதித்த கிரிக்கெட் வீரர்களில் முதன்மையானவர் எம்எஸ் தோனி தான். அதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார். தோனி பெயரை கூறியதும் உற்சாகமடைந்த ரசிகர்கள் இடைவிடாது சில நிமிடங்கள் கரகோஷம் எழுப்பினார்கள். இதனால் ஸ்டனான தினேஷ் கார்த்திக், ஒரு நிமிடம் பேச்சையே நிறுத்தினார்.

தமிழ்நாட்டின் சிறிய கிராமமான சின்னப்பம்பட்டியில் கிட்டத்தட்ட 42 வயதாகும் தோனியின் பெயரை சொல்லியதும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒட்டுமொத்தமாக கரகோஷம் எழுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தினேஷ் கார்த்திக் பேசிய வீடியோவை பகிர்ந்து தோனி மாஸ் இதுதான் என்று சென்னை அணி ரசிகர்களும், அவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.