அகமதாபாத்: பாகிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானை மைதானத்திலேயே நமாஸ் செய்யுமாறு அறிவுறுத்தியது யார் என்று முன்னாள் வீரர் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எவ்வளவு விறுவிறுப்பாக நடந்து வருகிறதோ, அதே அளவிற்கு சர்ச்சையுடன் நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் பங்கேற்க முடியாதது, பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக டிகே குரல் கொடுக்காதது, பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என்று ரசிகர்கள் கரகோஷம் எழுப்பியது என்று ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்காதது, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா வழங்காதது உள்ளிட்டவையும் விவாதமாகியுள்ளது. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது அகமதாபாத் மைதானத்தில் நடந்த விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தரப்பில் ஐசிசி-யிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் ஃபீல்டிங் செய்த போது பேப்பர் ராக்கெட் விட்டது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கலாய்த்து வம்புக்கு இழுத்தது என்று அகமதாபாத் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் அத்துமீறினர். அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீதும், பிசிசிஐ மீதும் சில குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐசிசி தரப்பில் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கனேரியா ஆவேசமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், இந்தியா மற்றும் இந்துகள் குறித்து பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் ஜைனப் அப்பாஸ் கருத்து கூறியது ஏன்?, ஐசிசி நடத்தும் தொடரை பிசிசிஐ நடத்துவதாக போல் இருப்பதாக மிக்கி ஆர்தர் கூறியது ஏன்?
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானை மைதானத்தில் நமாஸ் செய்யும் போது கூறியது யார்?. பிறரின் தவறுகளை மட்டும் பார்க்காதீர்கள் என்று ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார். கனேரியாவின் ட்வீட்கள் பாகிஸ்தான் மற்றும் இந்திய ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.