மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டதற்கு, தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் முக்கியக் காரணம் என கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு கருத்து நிலவி வந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருவரும் இணைந்து பணியாற்றியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், தன்னை கேப்டனாக்கியது கம்பீர் இல்லை என்ற உண்மையை சூர்யகுமார் யாதவ் தற்போது வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், துணை கேப்டனாகக் கூட இல்லாத சூர்யகுமார் யாதவ் திடீரென கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இது குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், "இலங்கைத் தொடருக்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பு அப்போதைய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது, இனிவரும் டி20 போட்டிகளுக்கு நான் கேப்டனாகச் செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், இந்த முடிவை ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் தான் திட்டமிட்டனர் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். அவர்கள் ராகுல் டிராவிட் மற்றும் ஜெய் ஷா ஆகியோரிடம் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். கௌதம் கம்பீர் அதன் பிறகுதான் அணிக்குள் வந்தார்" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

சூர்யகுமார் யாதவை கேப்டனாகத் தேர்ந்தெடுத்த நிர்வாகத்தின் முடிவு இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. அவர் தலைமையில் இந்திய அணி இதுவரை விளையாடிய 52 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பதிவு செய்து 80 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும், சொந்த மண்ணில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது. இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடர்களிலும், ஆசியக் கோப்பையிலும் இந்திய அணி அவரது தலைமையில் அபார வெற்றிகளைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
