ஏன் இவருக்கு வாய்ப்பு?
மற்ற மூத்த வீரர்கள் மற்றும் பிற முதல் தர கிரிக்கெட் சாதனையாளர்கள் எல்லாம் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், இந்த பாலகனுக்கு ஏன் வாய்ப்பு என சிலர் புருவம் உயர்த்தலாம். காரணம் இருக்கிறது. இவர் பள்ளி பயிலும் காலத்தில் இருந்தே கிரிக்கெட்டில் சாதனை புரிந்துள்ளார்.
யார் இந்த ப்ரித்வி ஷா?
ப்ரித்வி ஷா மும்பையின் புறநகர் பகுதியான விராரில் வளர்ந்து வந்தார். நான்கு வயதில் தன் தாயை இழந்துள்ளார். கிரிக்கெட் மீது ஆர்வம் காரணமாக எட்டு வயதில் கிரிக்கெட் ஆடுவதற்கு என்றே, அதற்கேற்ற பள்ளிக்கு மாறியுள்ளார். இவரது தந்தை இவரை பள்ளிக்கு கொண்டு போய் விட ஒன்றரை மணி நேரம் ஆகிறது என்ற காரணத்துக்காக தன் வியாபாரத்தையே விட்டு விட்டார் எனவும் கூறப்படுகிறது.
சாதனைகள் அதிகம்
டிவிஷன் லீகில் 14 வயதில் சதம் அடித்து, குறைந்த வயதில் சதம் அடித்த சாதனையை செய்தார். அதே 14 வயதில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 546 ரன்கள் அடித்து கலக்கினார். 17 வயதில் தன் முதல் ரஞ்சி போட்டியில் தன் முதல் சதத்தை அடித்தார். அதே போல துலீப் தொடரிலும் முதல் போட்டியில் சதம் அடித்து இரண்டு முதல் தர கிரிக்கெட் தொடர்களின் முதல் போட்டியில் சதம் அடித்த சாதனையும் செய்தார். இதையடுத்து மும்பை அண்டர் 16 அணியின் கேப்டன், ஐசிசி அண்டர் 19 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வெற்றி பெற்றுக் கொடுத்தது என நீண்டு கொண்டே செல்கிறது சாதனை பட்டியல்.
எப்படி இந்திய அணியில்?
ஐபிஎல் தொடரில் ப்ரித்வி ஷா அசால்டாக ஆடிய விதத்தை பார்த்து அனைவரும் யார் இந்த சிறுவன் என கேட்க துவங்கினார்கள். அடுத்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி தொடர்ந்து சதம், அரைசதம் என ரன்களை குவித்து வந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தார். எனினும், களத்தில் இறங்கி ஆடும் வாய்ப்பை பெறவில்லை. தற்போது, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறங்கி ஆடி வருகிறார். முதல் தர கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் 7 சதம், 5 அரைசதம் அடித்துள்ளார். பாலகன் என்றாலும் அடுத்த சச்சின் என சொல்லும் வகையில் இருக்கிறது இவரது ஆட்டம்.