லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் அல்லது இஷான் கிஷன் இருவரில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இந்த மைதானம் ஆஸ்திரேலியா ஆடுகளத்தை ஒத்திருப்பதால், ஆஸ்திரேலியா அணிக்கே சாதகம் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

இருப்பினும் இந்திய வீரர்களான புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஜடேஜா ஆகியோரின் ஃபார்ம் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார் செயல்பட போகிறார்கள் என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளதால், இவர்களில் ஒருவர் நிச்சயம் விக்கெட் கீப்பராக களமிறங்கப் போவது நிச்சயம். இதனிடையே ரிஷப் பண்ட் போலவே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் இஷான் கிஷனை தேர்வு செய்ய வேண்டும் என்று ஆஸி. ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இஷான் கிஷன் அதிரடியாக ஆடுவார் என்றாலும் ஸ்விங் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களிடம் பெட்டிப்பாம்பாக அடங்கிடுவார். இதனால் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் 4 போட்டிகளிலும் கேஎஸ் பரத் மட்டுமே களமிறக்கப்பட்டார்.
சில இன்னிங்ஸ்களில் கேஎஸ் பரத் சிறப்பாக ஆடியிருந்தார். இதனால் கேப்டன் ரோகித் சர்மா, கேஎஸ் பரத்தையே விக்கெட் கீப்பராக தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இஷான் கிஷன் சிறப்பாக ஆடியிருப்பதால், கடைசி நேரத்தில் ஏதேனும் ட்விஸ்ட் நடக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.